பொடுகினை முற்றிலுமாக ஒழித்து, நீண்ட கூந்தலைப் பெற, இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.
வேப்பிலை - 2 கைப்பிடி, மிளகு - 15 இரண்டையும் அரைத்து தலையில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.
அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.
நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.
வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.
தேங்காய்ப் பால் - அரை டம்ளர், எலுமிச்சைச் சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் - சிறிதளவு ஊறவைத்து அரைத்தது இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.