ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.
பொறித்த அப்பளம் காகிதம் போல் ஆகிவிட்டால், அதனை மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க மொறுமொறு என நன்றாக இருக்கும்.
தட்டை செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக ஒரு டம்ளர் கொள்ளு பயிறை ஊற வைத்து அரைத்து தட்டை செய்தால் சுவையாக இருக்கும்.
வாழைக்காயை பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காமல் வேக வைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் அல்சர் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும்.
அடை செய்யும் போது பச்சரிசிக்கு பதிலாக கோதுமை ரவையை போட்டு ஊறவைத்து செய்தால் தனி சுவையுடன் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.
-செளமியா சுப்ரமணியன்,
பல்லாவரம்.
சூப் செய்யும்போது ஒரு துண்டு வெங்காயம் சிறிது கடுகை நெய்யில் வறுத்து சேர்க்க, சூப் வாசனையுடன் இருக்கும்.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது, அரை தேக்கரண்டி தயிர் சேர்த்தால் நெய் கமகமவென்று இருக்கும்.
உப்பு ஜாடியில் ஈரம் கசிந்தால், ஜாடிக்குள் சிறிது அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரக்கசிவு இருக்காது.
-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.