சூறாவளிப் பெண்..!

பூஜா தோமர்: உலக தற்காப்புக் கலை போட்டியில் இந்தியாவின் முதல் பெண் சாம்பியன்
சூறாவளிப் பெண்..!
Picasa
Updated on
1 min read

"அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்' உலகப் போட்டியில் முதல் இந்திய பெண்ணாக வெற்றி பெற்றிருப்பவர் பூஜா தோமர். இவர் பெண்கள் "ஸ்ட்ராவெயிட்' பிரிவில் பிரேசிலின் ராயனே டாஸ் சாண்டோஸை 30-27, 27-30, 29-28 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்டத்தில் புதானா கிராமத்தைச் சேர்ந்த பூஜா தோமர், தற்காப்புக் கலைகளில் ஒரு பிரிவான "வுஷூ' வில் ஐந்து தேசிய பட்டங்களை வென்றுள்ளார். 2023-இல் உலகின் மிகப்பெரிய கலப்பு தற்காப்புக் கலை போட்டிகளை நடத்தும் அமெரிக்க நிறுவனமான யூ.எஃப்.சி.யுடன் ஒப்பந்தம் போட்டவரும் இவர்தான். அவரிடம் பேசியபோது:

""நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள். நான் கடைக் குட்டி. பிறந்தது மூன்றும் பெண்கள் என்றாலும், பெற்றோர் கவலைப்படவில்லை.

" தைரியசாலிகளாக இருந்தால்தான் சவால்களை எதிர்கொள்ள முடியும்' என்பார் என் அப்பா. எனக்கு ஆறு வயதாகும்போது அப்பா காலமானார். எதிர்காலம் இருண்டுவிட்டது என்று பயந்தோம். அம்மாதான் தைரியமாக, குடும்பப் பாரத்தைச் சுமந்தார். இரண்டு வேளை உணவு, புது உடைகள் என்பது கனவாகிப் போயின.

மூத்த சகோதரி மருத்துவரானார். இரண்டாமவர் செவிலியர் ஆனார். எனக்கு படிப்பு ஏறவில்லை. கிராமத்தில் சிறுவர்களை அடித்து துவைப்பேன். ஜாக்கிசான் படங்களைப் பார்த்து சண்டைகள் போடுவதில் பல யுக்திகளைக் கற்றேன். பெயருக்காகப், பள்ளிக்குச் சென்றாலும் கராத்தே போட்டிகளில் வென்றேன். 17-ஆம் வயதில் "வுஷூ' பிரிவில் பயிற்சி பெற்று ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றேன். அக்கா மருத்துவர் படிப்பை முடிக்கும் தருவாயில் பணத் தேவை ஏற்பட்டிருந்தது. அந்த சமயத்தில் எனக்கு ஐம்பதாயிரம் கொடுத்து "கலப்பு தற்காப்புக் கலை' போட்டிகளில் சேர்த்துக் கொண்டார்கள். அது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஹிந்தி நடிகர் "டைகர்' ஷெராஃப் நிர்வகிக்கும் தற்காப்புக் கலை பயிற்சி நிலையத்தின் சார்பாக இந்தோனேஷியாவில் என்னை பயிற்சிக்கு அனுப்பினார்கள். 28-ஆம் வயதில் எதிராளியை வீழ்த்தும் லாவகத்தை பயிற்சி மூலம் பெற்றேன்.

2023-இல் இருந்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். ஜூன் 9-இல் நடந்த போட்டியில் எதிராளி திறமையானவர். இரண்டாவது சுற்று மிகவும் கடினமாக அமைந்தது. என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. தளர்ந்து நின்றேன். "கண்ணை அகலமாகத் திற எதிரியைப் போட்டுத் தாக்கு' என்று பயிற்சியாளர் உற்சாகப்படுத்த, மூன்றாம் சுற்றில் எதிராளி ராயனே டாஸ் சாண்டோஸை வீழ்த்தினேன். சில நொடிகளில் நானும் மயக்கமானேன்.

இந்திய வீரர்கள் தோல்வியடைபவர்கள் அல்ல. விரைவில் சாம்பியனாவோம். இந்த வெற்றி எனது வெற்றி அனைத்து இந்திய ரசிகர்களுக்கும், அனைத்து இந்திய தற்காப்புக் கலை வீரர்கள் வீராங்கனைகளுக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்குப் பிறகு, எனது செல்லப் பெயர் "சூறாவளி' என்றாகிவிட்டது.'' என்கிறார் பூஜா தோமர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com