இரண்டு வயது சிறுவனான சாய் சித்தார்த், பொதுஅறிவில் சிறந்து விளங்கி சாதனைகளைப் படைத்துவருகிறார். கோவையைச் சேர்ந்த மணிகண்டன்- விஜயலட்சுமி தம்பதியின் மகனான இவருக்கு, விருதுகள் குவியத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து மணிகண்டனிடம் பேசியபோது:
'நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிறேன். அதற்காக வீட்டில் பொது அறிவு புத்தகங்கள், உலகப்படம் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கிறேன். சாய் பிறந்தது முதல் படு சுறுசுறுப்பாக இருந்தான். நாங்கள் பேசுவதை உற்றுக் கவனிப்பான்.
உலகப் படத்தை வைத்து உலக நாடுகள் அதன் கொடிகள், இந்தியா அதன் மாநிலங்கள் குறித்து சித்தார்த்துக்கு சொல்லிக் கொடுத்தோம். அதை உடனே சித்தார்த் கிரகித்துக் கொண்டான்.
நாங்கள் சொல்வதை உள்வாங்கி, எங்கள் கேள்விகளைப் புரிந்து கொண்டு அடையாளம் காட்டத் தொடங்கிவிட்டான். போகப் போக சில விநாடிகளில் விடைகளைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான்.
உலக நாடு ஒன்றின் தேசிய கொடியைக் காண்பித்தால் அந்த நாட்டை உலகப் படத்தில் சாய் சித்தார்த் காண்பிப்பான். கண்டங்களின் பெயரையும் சரியாக அடையாளம் காட்ட சித்தார்த்தால் முடியும். இத்துடன், இந்தியாவில் உள்ள மாநிலங்களையும், உலகின் ஏழு அதிசயங்களையும் மிகக் குறைந்த கால அளவில் சுட்டிக் காட்ட முடியும்.
21.7 விநாடிகளில் இந்திய மாநிலங்களின் பெயர்களை சுட்டிக் காண்பிப்பான. கண்டங்களின் பெயர்களை சுட்டிக் காட்ட சித்தார்த்துக்கு 11.42 நொடிகள் போதும். உலகின் ஏழு அதிசயங்களை அடையாளம் காண்பிக்க 8.95 விநாடிகள் சித்தார்த் எடுத்துக் கொள்கிறான்.
சித்தார்த்தின் நினைவு ஆற்றல் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொடுத்தது. "உலகின் குட்டி அறிவாளி' என்ற பட்டத்தை அமெரிக்க உலக சாதனை புத்தகம் வழங்கியது. ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் விருது, பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.
ஆஸ்கர் உலக சாதனைப் புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், அகில உலக சாதனைப் புத்தகம், கலாம் உலக சாதனை புத்தகம் போன்றவற்றிலும் சித்தார்த் இடம்பிடித்துள்ளான்.
சித்தார்த்தின் கவனம் சிதறாமல் இருக்க, நாங்கள் தொலைக்காட்சி, அலைபேசிகளைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளோம். பொது அறிவு தொடர்பான விஷயங்கள் சித்தார்த்துக்கு அறிமுகம் செய்கிறோம். அவை குறித்து விளக்குகிறோம்'' என்கிறார் மணிகண்டன்.