திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

அரைகுறை வேலை

அன்று கணிதத் தேர்வு. தேர்வு அறையில் அமர்ந்து கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் மணி. கொஞ்சம் படபடப்பாக இருந்தது. ""மணி, கவனமாக எழுது. கணக்கில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும்! அப்போதுதான் மேல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:02 pm IST

ன்று கணிதத் தேர்வு. தேர்வு அறையில் அமர்ந்து கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் மணி. கொஞ்சம் படபடப்பாக இருந்தது. ""மணி, கவனமாக எழுது. கணக்கில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும்! அப்போதுதான் மேல் படிப்புக்கு எளிதாக இடம் கிடைக்கும்'' என்று எச்சரித்திருந்தார் அப்பா. ""வினாத்தாளைச் சரியாகப் படியுங்கள். பகுதி ஒன்றில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இருபது மதிப்பெண். மொத்தம் அறுபது மதிப்பெண். அந்த வினாக்களைப் புரிந்துகொண்டு முதலில் அவற்றிற்கு விடை எழுதுங்கள்'' என்று வகுப்பில் டீச்சர் சொல்லியிருந்ததும் நினைவு வந்தது.

வினாத்தாளை வாங்கியதுமே மணி, அவசரம் அவசரமாக பகுதி ஒன்றைக் கவனித்தான். அறுபது மதிப்பெண்கள். ஏதேனும் மூன்றிற்கு விடை தருக என்று ஐந்து கேள்விகள் கொடுத்திருந்தார்கள். மணி படித்தான். ஐந்துமே அவனுக்குத் தெரிந்தவைதான். விரைவாக, முதல் மூன்று கேள்விகளுக்கும் விடை எழுதினான். பிறகு பகுதி இரண்டு. அதில் இருந்த மூன்று கேள்விகளுக்கும் விடை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

 ""அம்மா, கணக்கில் நூற்றுக்கு நூறு வரும். எல்லாக் கேள்விகளும் தெரிந்தவையாக இருந்தன. சரியாக பதில் எழுதிவிட்டேன்'' என்று மணி துள்ளிக் குதித்தான்.

  அம்மா மிகவும் மகிழ்ந்தார்கள்.

  ""மணி, கேள்வித்தாளைக் கொடு. பகுதி ஒன்றில் மூன்று கணக்குக் கேட்டிருப்பாங்க. மொத்தம் அறுபது மதிப்பெண் என்று போட்டிருக்குமே.'' அதைச் சரியா போட்டுட்டியா?என்று கேட்டார் அப்பா.

  ""போட்டாச்சு அப்பா. கேள்வித்தாளிலேயே எழுதி வந்திருக்கேன் பாருங்க.''

  ""ஐந்தாவது கணக்கு போடலியா?''

  ""ஏதேனும் மூன்றுதானே போடச் சொல்லியிருக்காங்க அப்பா! அதுதான் முதல் மூன்று கணக்கையும் போட்டிருக்கேனே!''

  ""கேள்வித்தாளைச் சரியாகப் படித்துப் பார்!'' என்று சற்று கோபமாகச் சொன்னார் அப்பா.

மணி, வினாத்தாளை வாங்கிப் படித்தான். அவன் முகம் இருண்டது. பகுதி ஒன்றில்,""ஏதேனும் மூன்றுக்கு விடை தருக. வினா எண் ஐந்து அவசியம் '' என்று எழுதியிருந்தது.

  ""ஐந்தாவது கேள்வி கட்டாயம்னு சொல்லியிருக்காங்க. அதை விட்டுட்டு வந்துட்டியே!'' அப்பா கத்தினார்.

  ""அப்படின்னா நூற்றுக்கு நூறு வராதா?'' அம்மா கவலையோடு கேட்டார்கள்.

அப்பாதான் பதில் சொன்னார். ""எப்படி வரும்? கட்டாயம்னு கேட்டிருக்கிற கேள்விக்கு விடை எழுதலியே! அறுபதுக்கு நாற்பதுதான் கொடுப்பாங்க...''

  "" ஏண்டா மணி இப்படிச் செய்தே?'' அம்மாவின் கேள்வியில் வருத்தம்.

""எல்லாம் உனக்கு அவசரம்தான். எந்த வேலையைச் செய்தாலும் நிதானமாக, முழு கவனத்தோட, முழு ஈடுபாட்டோட செய்யணும். எதையும் அரைகுறையாகச் செய்யக்கூடாதுன்னு ஆயிரம் முறை சொல்லியிருக்கிறேன். நீ கேட்டால்தானே!'' என்று அப்பா கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

  போன வாரம்தான் மணி, ஒரு பிரபல பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தான்.

""கையெழுத்துப் போட்டாயா? உறையின் மேல் முகவரி சரியாக எழுதினாயா? மறக்காமல் பின்கோடு எழுது. பின்கோடு குறிப்பிடாவிட்டால் கடிதம் போய்ச் சேரத் தாமதமாகும்...'' என்றெல்லாம் அப்பா எச்சரித்துவிட்டுப் போயிருந்தார். எல்லாவற்றிற்கும் "" உம்... உம்...'' என்று தலையாட்டினான் மணி. கடித உறையைத் தபாலில் சேர்த்துவிட்டு வந்த பிறகுதான், தபால்தலை ஒட்டாதது நினைவுக்கு வந்தது. நான்கைந்து நாட்களில் கடிதம் அவனுக்கே திரும்பி வந்து விட்டது. அபராதம் கட்டி வாங்கிக்கொண்டான்.

அப்பா அப்போதும், ""அரைகுறை வேலை ஆபத்தில் முடியும்! எதையும் பொறுப்புடன்செய்'' என்றார்.

  மணியின் தங்கை மீனா இன்னும் மோசம். ஒரு வேலையைச் செய்தால் அதைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவாள். வாசல் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வரச் சொன்னார்கள் அம்மா. மீனா, வாளியை எடுத்துக்கொண்டு போனாள்.

தொலைக்காட்சியில் ஏதோ பாட்டுச் சத்தம் கேட்கிறதென்று, குழாயடியில் வாளியை வைத்துவிட்டு வந்துவிட்டாள். சற்று நேரம் கழித்து,""தண்ணீர் பிடித்து வரச் சொல்லியிருந்தேனே, எங்கே?'' என்று அம்மா கேட்டதும்தான் நினைவு வந்தது. வாசலில் போய்ப் பார்த்தால், வாளியைக் காணோம்.

திங்கட்கிழமை வெள்ளைச் சீருடை வேண்டும் என்று, ஸ்கர்ட்டுக்கும் சட்டைக்கும் மீனா சோப்புப் போட்டுத் தேய்த்தாள். ஆனால் உலர்த்த மறந்துவிட்டாள். ஏதோ வேலை. பாதியிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டாள். மறு நாள் பள்ளிக் கூடம் கிளம்பும்போது வெள்ளைச் சீருடையைத் தேடியபோதுதான், அதை உலர்த்த மறந்தது நினைவுக்கு வந்தது. உடனடியாக குளியலறைக்குச் சென்று வாளியில் துணி இருக்கிறதா என்று பார்த்தாள். நல்ல வேளை. அம்மா எடுத்து உலர்த்தி வைத்திருந்தார்கள்.

 ஒரு நாள் இரவு. பால் சுட வைப்பதற்காக அம்மா எழுந்து சமையலறைப் பக்கம் போனார்கள். கூடவே எழுந்து வந்த அப்பா சட்டென்று சொன்னார்,""நில். அடுப்பைப் பற்ற வைக்காதே! விளக்கைப்போடாதே! கேஸ் நாற்றம் அடிக்கிறது.'' அம்மாவும் மூக்கைக் சுளித்து,""ஆமாம், சமையல் கேஸ் கசிகிறது!'' என்றார்கள்.

பிறகு அப்பா, ஒரு துணியால் மூக்கைக் கட்டிக்கொண்டு சமையல் அறையின் கேஸ் சிலிண்டரைச் சரியாக மூடினார். சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தார். சிறிது நேரம் சென்றது. ஆபத்து எதுவும் நேராது என்று உறுதி செய்துகொண்ட பிறகு, அடுப்பைப் பற்ற வைத்தார்கள் அம்மா. அப்பா கேட்டார்,""கேஸ் சிலிண்டரைச் சரியாக மூடவில்லை. கேஸ் கசிந்து அறை முழுதும் பரவியிருக்கிறது.

இது யார் செய்த வேலை?''  அம்மா சொன்னார்கள்,""மீனாதான் எதற்காகவோ தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். அரைகுறை வேலை. சிலிண்டரைச் சரியாக மூடவில்லை போலிருக்கிறது.''

  ""நீ கவனிக்காமல் போய் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்திருந்தால் பெரிய விபத்தே நிகழ்ந்திருக்கும்...''

  ""வீடு தீப்பிடித்திருக்கும். நானும் கருகிப் போயிருப்பேன்...''

  மறுநாள் காலை செய்தி அறிந்ததும் மீனா விக்கித்துப்போனாள்.""என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா...'' என்று அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.""அம்மா, இது எனக்கொரு பாடம். இனி எப்போதும் கவனக் குறைவாக இருக்கமாட்டேன். எதையும் அரைகுறையாகச் செய்யமாட்டேன்!''

  ""சிறு கவனக் குறைவு எப்படிப்பட்ட பேராபத்தை விளைவிக்கக்கூடியது என்று நானும் தெரிந்துகொண்டேன்!'' என்றான் மணியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.