நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரங்கம்: தனியே ஒரு குழந்தை!

சாலைக்கு அருகில் விளையாட்டுத் திடல். ஒன்பதாம் வகுப்பு முருகனும், சுதாகரும் வேறு சில மாணவர்களோடு திடலில் விளையாடுகின்றனர். அப்போது பந்து, சுற்றுச் சுவரைத் தாண்டு வெளியே சாலைக்கு வருகிறது. அதை எடுக்க முருகனும் சுதாகரும் வெளியே வருகிறார்கள்..., அங்கே மரத்தடியில் ஒரு குழந்தை நிற்கிறது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2015, 12:07 pm

பூதலூர் முத்து

காட்சி - 1

இடம் - சாலை

மாந்தர் - மாணவர்கள் முருகன்,

சுதாகர், ஒரு பெண் குழந்தை.

(சாலைக்கு அருகில் விளையாட்டுத் திடல். ஒன்பதாம் வகுப்பு முருகனும், சுதாகரும் வேறு சில மாணவர்களோடு திடலில் விளையாடுகின்றனர். அப்போது பந்து, சுற்றுச் சுவரைத் தாண்டு வெளியே சாலைக்கு வருகிறது. அதை எடுக்க முருகனும் சுதாகரும் வெளியே வருகிறார்கள்..., அங்கே மரத்தடியில் ஒரு குழந்தை நிற்கிறது.)

முருகன்: (குழந்தை அழுவதை பார்க்கிறான்) சுதாகர், அந்தக் குழந்தை அழுவதைப் பார்! யாருடைய குழந்தைன்னு தெரியலே..., பெற்றோர் தவற விட்டிருக்காங்க போல இருக்கு. பக்கத்திலே யாரையும் காணோமே...?

சுதாகர்: இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்து அழைச்சுக்கிட்டுப் போகப் போறாங்க...

முருகன்: அதை எப்படி உறுதியாச் சொல்ல முடியும்?

சுதாகர்: சரி, அதுக்கு நாம என்ன செய்யறது?

முருகன்: இருட்டாயிடுச்சு...,தெரு விளக்கும் போட்டாச்சு...,நாம ஏதாவது செஞ்சு அந்தக் குழந்தையை முதல்ல காப்பாத்தணும்...,அதுக்கு ஆபத்து காத்திருக்கு.., அங்கே பார்!

காட்சி - 2

இடம் - சாலை

மாந்தர் - முருகன், சுதாகர், முரடன்,

மாணவர்கள், குழந்தை.

(முருகன் காட்டிய திசையில் சுதாகர் பார்க்கிறான். ஒருவன் அடர்ந்த முடி, முறுக்கு மீசை, முரட்டுத் தோற்றத்தோடு மிதிவண்டியில் வந்து, குழந்தை அருகில் நிறுத்தி இறங்குகிறான்.

அவன் அறியாதவாறு முருகனும், சுதாகரும் திடலின் வாயிலுக்கு அருகில் சுவரில் மறைந்து கொள்கின்றனர்.)

முரடன்: (குழந்தையிடம்) பாப்பா...,அப்பா அம்மாவைத் தேடறியா?(குழந்தை அவன் தோற்றத்தைக் கண்டு மேலும் அழுகிறது) என்னோட வா.., நான் உன்னோட அப்பா, அம்மாகிட்ட கொண்டுபோய் விடறேன்...,அழாதே. (ஒரு மிட்டாய்ப் பொட்டலத்தைக் கொடுத்து குழந்தையைத் தூக்க முயலுகிறான்)

முருகன்: (மெதுவாக) சுதாகர், இந்த ஆபத்தான நேரத்தில் அந்தக் குழந்தையை அநாதையா விட்டுடக் கூடாது. எப்படியாவது காப்பாத்தணும்!

சுதாகர்: அவனைப் பார்த்தா ரெüடியைப் போலத் தெரியுதே!

முருகன்: ஆமாம்..., நாம கவனமா செயல்பட்டுத்தான் அந்தக் குழந்தையைக் காப்பாத்தணும். நீ அமைதியா இரு. நான் சொல்றதைக் கவனமாக் கேள்! திடல்ல இந்த நேரத்திலே.யும் சில மாணவர்கள் விளையாடறாங்க....அவங்க ஒரு அஞ்சு பேரை அழைச்சுகிட்டு வா.

(அழைத்து வருகிறான்)

முருகன்: (அவர்களிடம்) ஒரு குழந்தை ஆபத்துல இருக்கு...! என்னோட நீங்க பக்க பலமா நில்லுங்க..., நான் சொல்றதுக்கு மறுப்பு சொல்லாம இருந்தா போதும். அந்தக் குழந்தையை எப்படியும் காப்பாத்தி ஆகணும்.

(அவர்களும் இசைவு தெரிவிக்கிறார்கள்)

காட்சி - 3

இடம் - சாலை

மாந்தர் - முருகன், மாணவர்கள், முரடன், குழந்தை, காவலர்கள்.

(மாணவர்கள் குழந்தை நின்ற இடத்துக்குப் போகிறார்கள். முரடன் அவர்களைப் பார்க்கிறான். குழந்தையை ஒரு கையால் தூக்கிக்கொண்டு மிதிவண்டியை மிதிக்கத் தயாராகிறான்)

-முருகன் மிதிவண்டியின் முன்னால் போய் நிற்கிறான்-

முருகன்: (குழந்தையைப் பார்த்து) செல்வி! உன்னை நாங்க எங்கேயெல்லாம் தேடறது? நாங்க விளையாட்டில கவனமா இருந்திட்டோம். நீ ஏன் வெளியே வந்தே...? இந்த மாமா உன்னைக் கொண்டுபோய் வீட்டிலே விடறேன்னு சொன்னாரா?

முரடன்: டேய், என்னடா...,விளையாடறீங்களா? இது என்னோட குழந்தை!

(மாணவர்கள் திகைக்கிறார்கள்)

முருகன்: (துணிவோடு) இது உங்க குழந்தையா? ஏன் இப்படி பேசறீங்க....? இது என்னோட அக்கா பொண்ணு செல்வி. அக்கா எங்களோட விளையாட்டு மைதானத்துக்கு குழந்தையை அனுப்பினாங்க...., கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு பலூன்காரர் வந்திருக்கார். வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தக் குழந்தை வெளியே சாலைக்கு வந்திருக்கு. குழந்தையை விடுங்க..., நாங்க அழைச்சுக்கிட்டுப் போறோம்....,இவங்க எல்லாம் எங்க தெருப் பையன்க..., உங்களுக்கு சந்தேகம் இருந்தா இவங்களைக் கேளுங்க.

மாணவர்கள்: நாங்க எல்லாம் ஒரே தெரு பையன்கதான். பாரதி தெரு...,இந்த முருகனோட அக்கா பொண்ணுதான் இந்தக் குழந்தை!

முரடன்: அதெல்லாம் முடியாது! நீங்க பள்ளிக்கூடத்துப் பசங்க...., ஏதோ நாடகம் நடத்தறீங்க...

முருகன்: இது எங்க அக்காவோட குழந்தை செல்வி! வேணும்னா நீங்க எங்களோட வாங்க...,நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்க...,அடுத்தவங்களுக்கு உதவியாத்தான் இருப்போம்.

முரடன்: அப்படீன்னா நான் குழந்தையைக் கடத்த வந்தவன்னு சொல்றியா?

(முருகனின் சட்டையைப் பிடித்து இழுக்கிறான்)

சுதாகர்: ஐயா, இவனை ஒண்ணும் செய்யாதீங்க...,அவங்க வீட்டுப் பிள்ளையை அவன் அழைச்சுகிட்டுப் போக வந்திருக்கான். நீங்க எதுக்கு தடையா இருக்கீங்க?

(மற்ற மாணவர்களும் குரல் கொடுக்கிறார்கள்...முரடன் சுற்றும் முற்றும் பார்க்கிறான்)

முரடன்: சரி, நான் குழந்தையை விடறேன்...,நீங்க உங்க பையிலிருக்கிற பணத்தைக் கொடுங்க...

முருகன்: விளையாட வந்த எங்களிடம் பணம் ஏது?

முரடன்: சரி, இந்தக் குழந்தை போட்டிருக்கிற காதணி, மோதிரம் எல்லாம் கழட்டிக் கொடு...,நான் போறேன்.

(அப்போது காவல் துறையிலிருந்து இரண்டு காவலர்கள் வருகிறார்கள். முரடன் தப்புவதற்கு முயல்கிறான். மாணவர்கள் உதவியோடு அவனைப் பிடிக்கிறார்கள்)

காட்சி - 4

இடம் - காவல் நிலையம்

மாந்தர் - முருகன், மாணவர்கள்,

உதவி ஆய்வாளர், காவலர்கள், குழந்தை, முரடன்.

(முரடனைக் குற்றவாளிக்கான அறையில் வைக்கின்றனர். முருகனின் நண்பர்களை அமரவைத்துவிட்டு முருகனை உதவி ஆய்வாளர் சந்திக்கிறார். குழந்தையைக் காப்பாற்ற தான் நடத்திய நாடகத்தை முருகன் அவரிடம் கூறுகிறான்)

உதவி ஆய்வாளர்: முருகன்! உன்னோட துணிச்சலைப் பாராட்டறேன். அந்தத் துணிச்சல் அறிவோடு கூடிய துணிச்சல்! பள்ளி மாணவர்கள் இப்படித்தான் இருக்கணும். நீ முரடன்கிட்டே பேச்சுக்கொடுக்குமுன்பே உன் நண்பனைக் காவல் நிலையத்துக்கு, உதவியைக் கோரி அனுப்பியது தக்க நேரத்தில் செய்த செயல்! குழந்தை கிடைத்ததோடு ஒரு சமூக விரோதியையும் அதற்கு உன் உடனடி நடவடிக்கைதான் காரணம். உனக்கு என்னோட வாழ்த்தும் பாராட்டும்!

(தொலைபேசி ஒலிக்கிறது! அடுத்த காவல் நிலையத்திலிருந்து ஒரு தகவல் வருகிறது)

உதவி ஆய்வாளர்: (முருகனிடம்) குழந்தையைக் காணோம்னு பாரி நகர் காவல் நிலையத்தில் அதன் பெற்றோர் புகார் கொடுத்திருக்காங்க..., குழந்தையோட அடையாளத்தையும் சரியா சொல்லியிருக்காங்க.....,குழந்தையை அதன் பெற்றோர் கிட்டே ஒப்படைப்பது இனிமே எங்க வேலை! நீ உன்னோட முகவரி, தொலைபேசி எண்ணைக் கொடுத்துட்டுப் போ. நீ எதிர்காலத்தில் மிகச் சிறந்த மனிதனாக வருவே...,என் வாழ்த்து!

(மற்ற மாணவர்களையும் அழைத்துப் பாராட்டுகிறார்! குழந்தையைக் காத்த மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் முருகனும் நண்பர்களும் புறப்படுகின்றனர்)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.