அழுத குழந்தையைத் தூக்கியுமே
அம்மா அடுப்பறை சென்றளாம்
கொழுகொழு பொம்மையாம் குழந்தைக்கே
குனிந்தே முத்தம் தந்தாராம்!
தட்டில் சோற்றைப் பிசைந்தேதான்
தாயும் குழந்தைக்கு ஊட்டினளாம்
தட்டி விட்டே பாப்பாவும்
சாப்பிட அடமே பிடித்ததுவாம்!
தட்டென ஏதோ சத்தம் வர
தரையில் குழந்தையை இறக்கிவிட்டே
பட்டென உள்ளே சென்றாராம்
பார்த்ததன் பின்னே வந்தாராம்!
தட்டைச் சுற்றிலும் ஐந்தாறு
தவிட்டுக் குருவிகள் இருந்தனவாம்!
கொட்டிய பருக்கை களை அவைகள்
கொத்திக் கொத்தித் தின்றனவாம்!
பருக்கைகள் பாப்பா உடலெங்கும்!
மல்லிகைப் பூக்களாய் இருந்தனவாம்!
பருக்கைகள் எடுத்துக் குருவிக ளுக்கு
பாப்பா வீசி மகிழ்ந்ததுவாம்!
குருவிகள் தின்ற பின் தாயும்
குனிந்தே குழந்தையைத் தூக்கினளாம்!
""அறிவுக் குருவியே என் பாப்பா
அடடா!'' என்றே மகிழ்ந்தாராம்!