காட்சி : 1
இடம் : கோழிப் பண்ணை
நேரம் : மாலை 5.30
பாத்திரங்கள் : ஆழி , மலர்மாரி
(ஆழி கண்களை மூடி அமர்ந்திருக்கிறது.)
மலர்மாரி: ஆழி.. நீ அடைகாக்கிற முட்டை, பொறிஞ்சுடும் வேளை நெருங்கிருச்சுனு நினைக்கிறேன்..
ஆழி: ஆமா.. நாளைக்குப் பொறிஞ்சிரும்னு தோனுது.. குழந்தைக்குப் பேர்கூட யோசிச்சு வெச்சிருக்கேன்..
மலர்மாரி: என்ன பேரு..?
ஆழி: பொற்கொடி!
மலர்மாரி: பொ..ற்..கொ..டி.. நல்லாருக்கு, ஆழி.. அருமையான பேர்..
(ஆழியின் முகம் மாறுகிறது. )
மலர்மாரி: ( புரியாமல்) என்னாச்சு.. ஏன் சோகமாயிட்டே..?
ஆழி: எப்டியாவது அந்த மோசமான கழுகுங்க பொற்கொடியை நெருங்காத மாதிரி பாத்துக்கணும்.. எப்டியாவது..
(மலர்மாரி அமைதியாகப் பார்க்கிறது. )
காட்சி : 2
இடம் : கோழிப் பண்ணை
நேரம் : காலை 7.10
பாத்திரங்கள் : ஆழி , மலர்மாரி
(முட்டை பொறிந்து கோழிக்குஞ்சு
வெளியே வருகிறது.)
மலர்மாரி: ஓ.. அற்புதம்.. அழகா இருக்கு..!
ஆழி: நம்ம முதலாளி அய்யா பார்த்தாருன்னா ரொம்ப சந்தோஷப்படுவார்..
மலர்மாரி: இப்டி ஒரு சமர்த்துச் செல்லத்தைப் பார்த்தா யார்தான் சந்தோஷப்படாம இருப்பாங்க..
ஆழி: ( சோகமாக) கழுகு.. அதை நெனைச்சாத்தான்.. கொஞ்சம்..
மலர்மாரி: ( இடைமறித்து) வாயை மூடு.. இந்த நேரத்துல போய்... பல்பொடிய எடுத்துக் கொஞ்சுவியா.. அத விட்டுட்டு..
ஆழி: அது பல்பொடி இல்லடி.. பொற்கொடி..
மலர்மாரி: ஏதோ ஒன்னு..!
காட்சி : 3
இடம் : கோழிப் பண்ணை
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
பாத்திரங்கள் : ஆழி ,பொற்கொடி ,மலர்மாரி
முதல் வாரம்: மலர்மாரி பொற்கொடிக்கு நடை பழக்குகிறது.
இரண்டாம் வாரம்: ஆழி பொற்கொடிக்கு உணவு தேடப் பழக்குகிறது.
மூன்றாம் வாரம்: பொற்கொடி மலர்மாரியைக் கொத்தத் துரத்துகிறது. ஆழி சிரிக்கிறது. --
காட்சி : 4
இடம் : கோழிப் பண்ணை
நேரம் : மாலை 6.05
பாத்திரங்கள் : ஆழி ,பொற்கொடி ,மலர்மாரி, கழுகு
(பொற்கொடி சிமென்ட் தொட்டியின்
விளிம்பில் நிற்கிறது. )
பொற்கொடி: அம்மா.. நான் இங்கிருந்து குதிச்சு கொஞ்சதூரம் வரை பறக்கப் போறேன் ..
ஆழி: வேண்டாம்.. சொன்னா கேளு.. நீ இன்னும் பறக்கத் தயாராகல..
பொற்கொடி: ம்மா.. மாரி அக்கா முட்டையிலிருந்து வந்த அடுத்த நாளே பறந்து வானத்துக்கே போனங்களாம்.. அதுமாதிரி நானும் பண்ணிப் பாக்கறேன்..
(ஆழி மலர்மாரியைப் பார்க்கிறது. )
மலர்மாரி: ( தடுமாறிக்கொண்டே) பொற்கொடி.. அப்பெல்லாம் உங்கம்மா பொறக்கவே இல்ல.. அவளுக்கு.. அதெல்லாம்.. தெரியாது..
(வானத்திலிருந்து அவர்கள் மீது நிழல் விழுகிறது. )
பொற்கொடி: ம்மா.. நான் பறக்கப் போறேன்..
(பொற்கொடி கீழே குதிக்கிறது. )
மலர்மாரி: (மேலே நிழல் வரும் திசையைப் பார்த்து) அய்யோ..!
(பொற்கொடி நிலத்தைத் தொடும்முன் கழுகு அதைக் கால்களால் கவர்ந்துகொண்டு செல்கிறது. )
ஆழி: பொற்கொடீ........!
(ஆழி வேதனையில் ஆர்ப்பரிக்கிறது. )
காட்சி : 5
இடம் : மழைக்காடு / மரம்
நேரம் : மாலை 6.35
பாத்திரங்கள் : கழுகு, கழுகு குஞ்சு, பொற்கொடி
(கழுகு பொற்கொடியைக் கூட்டுக்குள் வைக்கிறது. )
கழுகுக் குஞ்சு: யாரும்மா இது..?
கழுகு: இது ஒரு கோழியின் குஞ்சு!........ பண்ணையிலிருந்து கொண்டுவர்றேன்..
கழுகுக்குஞ்சு: எதுக்கு..?
கழுகு: (அதிர்ந்து) எதுக்கா..? உனக்கு.. உனக்குத்தான்!... பசிக்கலியா..?
(கழுகுக் குஞ்சு பொற்கொடியைப் பார்க்கிறது. )
கழுகுக் குஞ்சு: இதப் பார்க்கவே பாவமா இல்லியா..? ஏம்மா இங்க பிடிச்சிட்டு வந்தீங்க..?
கழுகு: ( தடுமாறி ) அது.. நம்மல மாதிரி கழுகுங்க.. அந்தப் பண்ணைக் கோழிகளை.. அதுதான் நானும் ஒரு
தடவை..
கழுகுக் குஞ்சு: ( பொற்கொடியைப் பார்த்தபடி ) வேணாம்மா.. இதக் கொண்டுபோய் அங்கேயே விட்ருங்க!.....
கழுகு: (அதிர்ந்து) மறுபடியும் அங்கேயா..? இதைத் தூக்கிட்டு வந்ததால என் மேல பயங்கரக் கோபத்துல இருப்பாங்க.. வேணும்னா நம்ம காட்டுக்குள்ளியே எங்காவது விட்டுடலாம்..
(கழுகு குஞ்சு பொற்கொடியை
அமைதியாகப் பார்க்கிறது. )
கழுகுக் குஞ்சு: அப்படினா ஒன்னு பண்ணலாம்..
காட்சி : 6
இடம் : மழைக்காடு
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
பாத்திரங்கள் : கழுகு, கழுகு குஞ்சு, பொற்கொடி
முதல் வாரம்: கழுகுக் குஞ்சும் பொற்கொடியும் இணைந்து இரை உண்கிறார்கள்.
இரண்டாம் வாரம்: ஆழி கூண்டுக்குள் சோகமாக அமர்ந்திருக்கிறது.
மூன்றாம் வாரம்: கழுகு பொற்கொடியுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறது.
காட்சி : 7
இடம் : மழைக்காடு / மரம்
நேரம் : மாலை 5.35
பாத்திரங்கள் : கழுகு, கழுகு குஞ்சு, பொற்கொடி
கழுகுக் குஞ்சு: (சோகமாக) வேற வழி இல்லியா, ம்மா..?
கழுகு: (சோகமாக) பொற்கொடி வளர்ந்துட்டா.. இனியும் நம்ம கூட்டுக்குள்ள இருக்க முடியாது..
(கழுகுக் குஞ்சு அமைதியாக இருக்கிறது. )
பொற்கொடி: அப்போ.. என்னை இந்தக் காட்டுக்குள்ள இறக்கி விட்ருவீங்களா.. ?
கழுகு: இல்ல, கொடி.. அப்படி மட்டும் செய்யவே மாட்டேன்.. அது ரொம்ப ஆபத்தானது..
கழுகுக் குஞ்சு: அப்டினா..?
கழுகு: அப்டினா, மறுபடியும் கோழிப் பண்ணையிலியே கொண்டுபோய் சேர்த்துரணும்.. அதான் எல்லாருக்கும் நல்லது..
(கழுகுக் குஞ்சு அதிர்ச்சியாகிறது. )
பொற்கொடி: அய்யோ.. கழுகம்மா.. நீங்க ஏற்கெனவே சொன்ன மாதிரி அங்க யாராவது உங்களப் பார்த்துட்டாங்கனா..?
கழுகு: ம்ம்ம்.. கையில கெடச்ச எதையாவது தூக்கி எறிவாங்க.. அடிபடும்.. நான் பண்ண தப்புக்கு எனக்கு அது தேவைதான்..
கழுகுக் குஞ்சு: (பதறி) அய்யோ.. எல்லாம் என்னால்தான்...
கழுகு: இல்ல.. நீ எந்தத் தப்பும் செய்யல செல்லம்.. கவலைப்படாத..
(கழுகு பொற்கொடியைத்
தூக்கிக்கொண்டு பறக்கிறது. )
கழுகுக் குஞ்சு: ( அழுதபடி) உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா..
காட்சி : 8
இடம் : கோழிப் பண்ணை
நேரம் : மாலை 6.45
பாத்திரங்கள் : ஆழி , மலர்மாரி, கழுகு, பொற்கொடி, முதலாளி
(ஆழி ஒரு மரத்தடியில்
சோகமாக அமர்ந்திருக்கிறது. )
மலர்மாரி: ஆழி.. இன்னும் எவ்ளோ நாளைக்கு அதையே நெனைச்சிட்டிருப்பே..? கொஞ்சம் மறக்க முயற்சி பண்ணு..
ஆழி: (அழுகிறது) என்னால.. என்னால முடியல, மாரி..
(திடீரென இறக்கைகள்
படபடக்கும் சத்தம் கேட்கிறது. )
மலர்மாரி: ( பதறி ) என்னது..
(கழுகு பொற்கொடியைக்
கீழே இறக்கிவிட்டு விரைவாகப் பறக்கிறது. )
ஆழி: ( உரக்க) பொற்கொடி..
பொற்கொடி: ( உரக்க) அம்மா..
(கழுகு கீழே பார்த்துக்கொண்டே பறக்கையில்
சடாரென ஒரு வலைக்குள் மாட்டுகிறது. )
மலர்மாரி: ( உரக்க) ஆழி.. அதே கழுகுதான்.. நம்ம முதலாளி வெச்சிருந்த பொறிக்குள்ள மாட்டிருச்சு.. நான் போய் அவரைக் கூட்டிட்டுவரேன்..
(பொற்கொடி நடந்தவற்றைச் சொல்கிறது. )
பொற்கொடி: அம்மா, எப்படியாவது கழுகம்மாவக் காப்பாத்துங்க.. அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது..
(ஆழி வலைக்குள் சோகமாக
இருக்கும் கழுகைப் பார்க்கிறது. )
மலர்மாரி: வாங்க முதலாளி.. இங்கதான்.. அந்தக் கழுகை விட்ராதீங்க..
(முதாலாளி , பிடிபட்ட கழுகை நோக்கி நடக்கிறார். )
ஆழி: ( வழிமறித்து) ஐயா.. அந்தக் கழுகைத் துன்புறுத்த வேண்டாம்.. அது நம்ம பொற்கொடியை நல்லபடியாத்தான் காப்பாத்தியிருக்கு..
மலர்மாரி: ( அதிர்ந்து) ஆனா, அது.. அந்தக் கழுகு தப்புப் பண்ணியிருக்கே..
ஆழி: ஆமா.. ஆனா, அப்பவே அது திருந்தவும் செஞ்சிருக்கு.. அப்படிப்பட்ட கழுகை தண்டிக்கிறது நியாயமா..?
(முதலாளி கழுகை விடுவித்து பறக்க விடுகிறார். )
- கோழிகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பறிக்கின்றன. --
(திரை)