சர்தார் வல்லபாய் படேல், ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலேயரும், ஒரு பிரெஞ்சுக்காரரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
வல்லபாய் படேலை கவனித்த அந்த மேலைநாட்டினர் அவர் முன் தங்கள் நாட்டின் பெருமையை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டனர். இதைக் கவனித்த வல்லபாய் படேல் அமைதியாக இருந்தார்.
பிறகு மேலை நாட்டின் புகழை படேலுக்கு உணர்த்தும் வகையில், பிரெஞ்சுக் காரர் ஆங்கிலையரைப் பார்த்து, ""நான் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயமாக ஆங்கிலேயனாகப் பிறந்திருப்பேன்...'' என்றார்.
அதற்கு ஆங்கிலேயர், ""நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்கா விட்டால், பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருப்பேன்...'' என்றார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பேசாமல் இருந்தார் படேல்.
படேலை சீண்டும் வகையில், ""நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம்!.... நீங்கள் எதுவும் பேசவே இல்லையே?.... ஏனோ?'' என்றார் ஒருவர்.
படேல் நிமிர்ந்து உட்கார்ந்தார். பிறகு அவர்களைப் பார்த்து, ""அதெற்கென்ன!.... பேசுகிறேனே!..... ஒரு வேளை நான் இந்தியாவில் பிறந்திருக்காவிட்டால், அதற்காக வெட்கித் தலை குனிந்திருப்பேன்!'' என்று கூறினார்.
இதைக் கேட்ட ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் படேலின் தேசபக்தியைக் கண்டு வியந்து பாராட்டினர்.
(பெரியோரின் வாழ்வில் சில சுவையான நிகழ்ச்சிகள்.... என்ற நூலிலிருந்து....)