பிழைக்க வழி!
பிழைப்பதற்கு வழியின்றி உலகநாதன் தவித்தான். ஊரிலிருந்த சாந்தமூர்த்தி என்ற அறிஞரை சந்தித்தான். தன் நிலைமையைச் சொல்லி ஆலோசனை கேட்டான். அவரும் பொறுமையாக அனைத்தையும் கேட்டார். பிறகு உலகநாதனிடம், ""இந்த ஊர் பரந்து விரிந்து கிடக்கிறது..... கடவுள் யாரையும் கைவிடமாட்டார்..... வெளியூர் சென்று வா.... அங்கு உனக்கு நல்லதே நடக்கும்!''
உலக நாதனும் அதற்கு சம்மதித்துப் புறப்பட்டான். பிறகு இரண்டு நாள்களில் ஊர் திரும்பினான். சாந்த மூர்த்தியை சந்தித்தான். அவரிடம், ""தங்களின் அறிவுரைப்படி நான் திரும்பிவிட்டேன்..... வழியில் ஒரு வறண்ட நிலம் இருந்தது.... கடுமையான வெயில்! நடந்து களைத்துப் போய் அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தேன். அந்த மரத்தில் ஒரு நொண்டிக் காகம் இருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. பசியால் துடித்துக்கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம் தான் கொண்டுவந்த உணவை நொண்டிக் காகத்திற்கு ஊட்டியது! எங்கோ ஒரு பாலைவனத்தில் இருக்கும் நொண்டிக் காக்கைக்குக் கூட இறைவன் உணவு அளிக்கும்போது என்னை நிச்சயம் கைவிடமாட்டான் என்று எண்ணி திரும்பி வந்து விட்டேன்!'' என்று கூறினான்.
அறிஞர் புன்னகைத்தபடி, ""உலகநாதா, அதெல்லாம் சரி!..... நீ அதில் எந்தக் காகம்?.... '' என்று கேட்டார்.
""ஐயா, நீங்க என்ன கேட்கறீங்க புரியலையே!'' என்று திடுக்கிட்டுக் கேட்டான் உலகநாதன்.
""அதில்லை உலகநாதா!.... யாராவது உணவு தந்து உதவுவார்களா என்று ஏங்கும் அந்த நொண்டிக்காகமா?.... அல்லது பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு இயலாத பிறருக்கும் வழங்கிய வலிமையுள்ள காகமா?... . நீ அதில் எந்தக் காகம்? என்று கேட்டேன்!'' என்றார் சாந்தமூர்த்தி.
உலகநாதனுக்குத் தன் தவறு புரிந்தது. வெட்கினான். பிறகு உண்மையை உணர்ந்தவனாய் சாந்தமூர்த்தியை வணங்கிவிட்டு தெளிவடைந்த முகத்துடன் சுறுசுறுப்பாய் விடைபெற்றான்.