புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மா மும்பையில் வசித்து வந்தார். அப்போது, ஒரு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு அவருக்குக் கவர்னரிடமிருந்து வந்தது. ரவிவர்மா விழாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரது குதிரை வண்டிக்காரர் நோய்வாய்ப்பட்டார். உடனே ரவிவர்மா அவரை வண்டியில் ஏற்றி, தன் குடும்ப டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.
அதன் காரணமாக ரவிவர்மாவால் அன்றைய தினம் நடக்கும் விழாவுக்குச் செல்ல முடியவில்லை. அதற்காக அவர் வருந்தவும் இல்லை. ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.
அவர் வராததற்கான காரணம் கேட்டு கவர்னரின் செயலாளர் அவருக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். ரவிவர்மா நடந்ததை உள்ளது உள்ளபடி கடிதத்தில் எழுதி அனுப்பினார்.
நான்கு நாள்களுக்குப் பிறகு கவர்னரின் செயலாளரிடமிருந்து மீண்டும் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "உங்களுக்குக் கவர்னர் விழாவைவிட வண்டிக்காரரின் நோய்தான் முக்கியமாகப் பட்டதா?' என்று கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு ஓவியர் ரவிவர்மா ஒரே வார்த்தையில் பதில் எழுதி அனுப்பினார் - "ஆமாம்!'