அன்னை மரியாள் அன்று செய்த
அருமைத் தவத்தினாலே - உலகில்
அவதரித்தார் ஏசு - நல்ல
அன்பை எங்கும் விதைப்ப தற்கே
அங்கு மிங்கும் சென்றார் - இன்பம்
எங்கும் நிலைக்கச் செய்தார்!
தொண்டு செய்வ தற்கே உலகில்
தோன்றி வந்தார் ஏசு - அன்பை
ஊன்றி வந்தார் ஏசு - தோன்றும்
எண்ணில் லாத துன்ப மெல்லாம்
ஏற்றுக் கொண்டார் ஏசு - எனவே
போற்றப் பெற்றார் ஏசு!
கூவிக் கூவி அழைத்து மக்கள்
குறைகள் கேட்டார் ஏசு - அவர்
குறைக ளைந்தார் ஏசு - நாட்டில்
பாவி கள்தம் பாவம் போக்கப்
பரனைத் தொழுதார் ஏசு - பரனைச்
சரண டைந்தார் ஏசு!
சின்னச் சின்னக் கதைகள் மூலம்
சிந்தை தூய்மை செய்தார் - மக்கள்
சிந்தை எல்லாம் நிறைந்தார் - யாரும்
என்றும் கர்த்தர் வழியில் செல்ல
ஏற்ற வழியைச் சொன்னார் - அவரைப்
போற்றும் வழியைச் சொன்னார்!
என்ன பாவம் செய்த போதும்
ஏசு பொறுமை காத்தார் - அவர்
மாசு மருவைத் தீர்த்தார் - ஆழ்ந்த
அன்பால் பாவம் செய்த பேரை
ஆண்ட வாமன் னிப்பாய் - என்று
வேண்டிக் கொண்டார் ஏசு!