துயில் நீங்கி எழும்போதே ஒளி வடிவான கடவுளை நினைந்து வணங்குக! கடவுளை நினைந்து உருகிய பெரியோர்கள் அக்கடவுள் மேல் பாடிய இரண்டொரு பாடல்களை, மெல்லிய இனிய குரலில் பாடி அவரை வணங்குதல் மிக நன்று.
தன்னினுஞ் சிறந்த, தன்னைப் படைத்த ஆண்டவனது அருள் ஒளியை இவ்வாறு காலையில், தன் அறிவு மலரும் காலத்திலேயே நன்றியுடன் நினைந்து குழையும் நெஞ்சுடைய ஒருவனுக்கு அந்நாள் முழுதும் அவன் அகத்தும் புறத்தும் அருள் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். அவனது அறிவு துலக்கமாய் இருக்கும். அவன் எந்த நன்முயற்சியில் புகுந்தாலும் அது செவ்வனே நிறைவேறும். அவனைக் காண்பவர்கள் எல்லோரும் அவன் மீது அன்புடையவர் ஆவர்.
(மறைமலையடிகளின் "சிறுவர்களுக்கான செந்தமிழ்' நூலிலிருந்து...)