/

ரயில் விபத்தைத் தடுக்கும் கருவி!

ரயிலில் பயணம் செய்வோர் நமது நாட்டில் அதிகம். உலக அளவில் இந்திய ரயில் சேவை மிகப் பெரியதாகும். சில சமயங்களில் எதிர்பாராமல் ரயில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள்.

Updated On :21 ஜூன் 2015, 12:02 pm

ரயிலில் பயணம் செய்வோர் நமது நாட்டில் அதிகம். உலக அளவில் இந்திய ரயில் சேவை மிகப் பெரியதாகும். சில சமயங்களில் எதிர்பாராமல் ரயில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள்.

ரயில்வே துறையில் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனினும் விபத்தைத் தடுக்கும் கருவியை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அந்தக் குறையைப் போக்கும்விதமாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல்

கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களான வி.ராம்பிரசாத், ஆர்.சுப்புராஜ், ஆர்.ஸ்ரீபத்மநாதன் ஆகிய மூவரும் ரயில் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து மாணவர்களிடம் கேட்டோம்:

""வித்தியாசமாகவும், மக்களுக்கும் அரசுக்கும் பயன்படும் படியான கருவியை கண்டு பிடிக்க வேண்டும் என யோசனை செய்தபோது, எங்கள் கல்லூரி தாளாளர் ஆர்.சோலைச்சாமி, ""ரயில் விபத்தைத் தடுக்க கருவி தயாரியுங்கள்'' என யோசனை கூறினார்.

இதையடுத்து மதுரை கோட்ட ரயில்வேதுறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களின் ஆலோசனைப்படி, பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்தக் கருவியைத் தயாரிக்கத் தொடங்கினோம். நாங்கள் கண்டுபிடித்த கருவியில் மூன்று சென்சார்கள் உள்ளன.

முதல் சென்சார் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர், கழிவுப்பொருள்கள், கல் போன்றவை இருந்தால் கண்டறியும். இரண்டாவது சென்சார் ரயில் தண்டவாளத்தில் மிருகங்கள், மனிதர்கள் இருந்தால் கண்டறியும். மூன்றாவதாக உள்ள சென்சார் தண்டவாளத்தில் விரிசல் இருந்தால் கண்டறியும் கருவி.

இந்தக் கருவியில் மைக்ரோ கண்ட்ரோல் உள்ளது. இது ரயில் தண்டவாளத்தில் உள்ள பொருள் அல்லது விரிசல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கண்டறியும். பொருள்கள் இருந்தால், ஒலி எழுப்பும் கருவி மூலம் பீப் பீப் என ஒலி எழுப்பப்படும். இந்த ஒலியைக் கேட்டு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விடுவார்.

மேலும் இதில் தகவல் கொடுக்கும் ஏரியல் பொருத்தப்பட்டுள்ளது. ரேடியோ ஃப்ரிக்வன்சி டிரான்ஸ்மீட்டர் உள்ளது. இது வானொலி முறையில் காந்த அலைகள் மூலம் ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கும்.

ரயில் ஓட்டுநர் அருகில் ஒரு கருவியைப் பொருத்த வேண்டும். ரயில் இயக்குவதில் பிரச்சனை உள்ளது என்பதை ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் கருவி ஒன்று நிலைய அதிகாரி அறையில் வைக்க வேண்டும்.

இந்த கருவியில் மைக்ரோ கண்ட்ரோலருடன் ரிசீவர் சென்ஸôர் பொருத்தப்பட்டுள்ளது. எந்தப் பொருள் ரயில் தண்டவாளத்தில் கிடக்கிறது என்பது குறித்த விபரத்தை எழுத்து வடிவில் தெரிவிக்க டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்நிலைய அதிகாரி அறையில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி, ஓட்டுநர் அருகே பொருத்தப்பட்டிருக்கும் கருவியிலிருந்து வெளி வரும் தகவலைப் பெற்று, அதனை எழுத்தாக மாற்றி டிஸ்பிளேவில் காண்பிக்கும். ஒலியும் எழுப்பும்.

இதன்மூலம் ரயில் நிலைய அதிகாரி ரயில் இயக்குவதில் உள்ள பிரச்சனை குறித்து தெரிந்து கொண்டு மேல் நடவடிக்கை எடுக்க இயலும்.

நாங்கள் தற்போது கண்டு பிடித்திருக்கும் கருவி சுமார் 10 மீட்டர் தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் பொருளை மட்டுமே கண்டறியும், ஓட்டுநருக்கும், ரயில்நிலைய அதிகாரி

அறைக்கும் 10 மீட்டர் தூரம் மட்டும் இருந்தால் தான் செயல்படும். அதிக தூரத்தில் உள்ள பொருள்களைக் கண்டறிய வேண்டும் என்றால் இன்னும் அதிகத் திறனுள்ள பாகங்களைப் பொருத்த வேண்டும்.

நாங்கள் கண்டு பிடித்திருப்பது விபத்தினைத் தடுப்பது குறித்த மாதிரிக் கருவியே. இதனை ரயில்வேதுறை மேம்படுத்தி பயன்படுத்தினால் நிச்சயம் விபத்தினை தடுக்க இயலும்'' என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.