தெருவோரவாசிகளுக்கான உலக கிரிக்கெட் போட்டி

தெருவோரம் வசிப்போரின் பிள்ளைகள் சிலரை படிக்க வைத்து, அவர்களை உலக கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க வைத்துள்ளார் சென்னையின் தன்னார்வ தொண்டு நிறுவனமான "கருணாலயா' பொறுப்பாளர் பால் சுந்தர் சிங்.
தெருவோரவாசிகளுக்கான உலக கிரிக்கெட் போட்டி
Updated on
1 min read


தெருவோரம் வசிப்போரின் பிள்ளைகள் சிலரை படிக்க வைத்து, அவர்களை உலக கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க வைத்துள்ளார் சென்னையின் தன்னார்வ தொண்டு நிறுவனமான "கருணாலயா' பொறுப்பாளர் பால் சுந்தர் சிங்.

நாட்டில் மெட்ரோ நகரங்களில் தெருவோரம் வசிப்போரின் வாரிசுகள் அடங்கிய கிரிக்கெட் குழு இருந்தாலும், "கருணாலயா' உருவாக்கிய "இந்தியா டைகர்ஸ்' அணி' 2019-இல் லண்டனின் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றது.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடப்பதற்கு முன்னதாக, தெருவோரப் பிள்ளைகளுக்கான உலக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இதன்படி, அவர்களுக்கான போட்டி சென்னை அமீர் மஹால் மைதானத்தில் செப். 22இல் தொடங்கி அக். 1 வரை நடைபெற்றது.

வங்கதேசம், புருண்டி, இங்கிலாந்து, ஹங்கேரி, மொரிஷியஸ், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ருவாண்டா, உகாண்டா, தான்ஸானியா, பிரேசில், ஜிம்பாப்வே அணிகள் கலந்து கொண்டன. சென்னை அணி உள்பட ஏழு இந்திய அணிகளும் போட்டியில் கலந்து கொண்டன.

ஒவ்வொரு குழுவிலும் நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தலா நான்கு பந்து வீச்சுகள் கொண்ட 5 ஓவர்கள். கருணாலயா அணியான "இந்தியா டைகர்ஸ்' அணிக்கு தமிழ்நாடு அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி, அஸீம் பிரேம்ஜி அறக்கட்டளை, ஆமோஸ் அறக்கட்டளை, சென்னை துறைமுகம் ஆகியன உதவின. சென்னை துறைமுகத்தின் கிரிக்கெட் பயிற்சியாளர் லோகநாதன் அணிக்கு பயிற்சி அளித்தார். இருப்பினும், அரை இறுதி சுற்று வரை மட்டுமே "இந்தியா டைகர்ஸ் அணி' போட்டியில் முன்னேற முடிந்தது. உகாண்டா அணி உலகக் கோப்பையை வென்றது.

இதுகுறித்து பால் சுந்தர் சிங் கூறியதாவது:

'கருணாலயாவில் கிரிக்கெட் அணியுடன் இதர தெருவோர பிள்ளைகளும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, உறைவிடம், உடை, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகளை கருணாலயா செய்து தருகிறது. கருணாலயா அணியின் கேப்டன் மோனிஷா எத்திராஜ் கல்லூரியில் படிக்கிறார். இதர ஆட்டக்காரர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர்.

கருணாலயாவில் கிரிக்கெட் அணி போலவே கால்பந்தாட்ட அணியும் உண்டு. தெருவோர பிள்ளைகளுக்கான கால்பந்தாட்ட உலகப் போட்டியில், 2016இல் எங்கள் அணி பிரேசில் ரியோவுக்கு சென்றுவந்தது. ரியோ ஒலிம்பிக்ஸூக்கு முன் நடந்த போட்டிகளில் எங்கள் அணி கலந்து கொண்டு தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளது. 2018இல் கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்கள் அணி மாஸ்கோ சென்று வந்தது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com