
ஓடி.டி. தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் தொடர்கள் மொழிகளை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டார்க் ஃபேஸ்' இணையத் தொடர் திகைக்க வைக்கும் திருப்பங்களுடனும், யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் காட்சிகளுடனும் உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சரண்பிரகாஷ் இயக்கியுள்ளார். மூத்த வழக்குரைஞராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் இதுவரை நடித்திராத பாணியில் நடித்திருக்கிறார். அவரது மகள் ஒய்.ஜி.மதுவந்தி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பெண்கள் விடுதியின் காப்பாளராக நடித்திருக்கிறார். இந்த தொடரின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.
விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு, பெரும் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் திரளாகக் கூடி, படத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ரசித்து வருகின்றனர்.
மறு வெளியீடு செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் படம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்த வெற்றியால் உற்சாகமடைந்து, மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்திருக்கிறார். விரைவில் அஜித்குமாரின் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', சூர்யாவின் 'காக்க காக்க' படங்களை இந்த ஆண்டுக்குள் மறு வெளியீடு செய்யவுள்ளார். அடுத்த ஆண்டு, ரசிகர்களின் விருப்பப்படி ரஜினிகாந்த்தின் 'கபாலி', விஜய்யின் 'தெறி', மற்றும் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்களை மறு வெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
துல்கர் சல்மானின் 'காந்தா' பட அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் 'அய்யா' வெளியாகியிருக்கிறது. 'அய்யா'வாக அவரது தோற்றம் கம்பீரமாக இந்த போஸ்டரில் உள்ளது. அதிலும் இந்த புதிய போஸ்டரில் துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது.
செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் செளபின் ஷாஹிர் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகை ஸ்ரீ லீலா தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளுக்கும் பேன் இந்தியன் நட்சத்திரமாகப் பயணித்து வருகிறார். தற்போது அவர் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார். அந்தக் குழந்தையின் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதில் அவர், 'வீட்டிற்குப் புதிய வருகை.
இது இதயத்தைக் கொள்ளைக்கொள்ளும் தருணம்' எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். ஸ்ரீலீலா குழந்தைகள் மீத அளப்பரிய பிரியம் கொண்டவர். அவ்வப்போது சமூக வலைத்தள பக்கங்களில் குழந்தைகளுடன் ரீல்ஸ்களைப் பதிவிடுவார். 23 வயதான ஸ்ரீலீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை இது. ஆம், ஏற்கெனவே தன்னுடைய 21-வது வயதிலேயே இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்திருந்தார் ஸ்ரீ லீலா. 2022-ஆம் ஆண்டு குரு - சோபிதா என்கிற இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் ஸ்ரீ லீலா தத்தெடுத்திருந்தார்.