சந்தானம் நடித்திருக்கும் "டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் சிம்பு, ஆர்யா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சந்தானம் பேசும் போது... "காதல் அழிவதில்லை' படத்தில் சிம்புவுக்கு பின்னால் நிக்கிற ஒருவனாக நடித்திருப்பேன்.
அதில் என்னுடைய நடிப்பை கவனித்துக் கொண்டே இருந்தார். பிறகு எனக்கு "மன்மதன்' படத்தில் வாய்ப்பைக் கொடுத்தார். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் "உங்களுக்கான இன்ட்ரோ சீன்ல பில்டப் வைக்கிறோம்' என்று சொன்னார். "லொள்ளு சபா' மக்களிடம் நன்றாக போய்சேர்ந்திருக்கிறது.
அதனால் மக்கள் கண்டிப்பாக கைதட்டுவார்கள்'என்று சொன்னார். எனக்கு கைதட்டுவார்களா என்று நான் கேட்டேன். அப்படி திட்டமிட்டுதான் அந்தப் படத்தில் என்னுடைய பெயர் சொல்கிற காட்சியை வைத்தார்கள். அன்றைக்கு எனக்கு கைதட்டல் வர வேண்டும் என நினைத்தவர். இன்றைக்கும் நினைக்கிறார் அவர்தான் சிம்பு.
ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் சில விஷயங்கள் யோசிக்கச் சொல்வார். எப்போதுமே அவர் பின்னால் நான் இருப்பேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். நான் சமீபத்தில் ஒரு இடம் வாங்கினேன். அங்க பழைய வீடு ஒன்று இருந்தது.
என்னுடைய அம்மாவும், மனைவியும் வெள்ளிக்கிழமைகளில் அங்க போய் விளக்கேற்றுவார்கள். அப்படி ஒரு நாள் அந்த வீட்டுக்கு ஆர்யா வந்தான். "வீடு பழையதாக இருக்கு மச்சா. இடிச்சிட்டு புதுசா கட்டு' என்று சொன்னான். அப்புறம் அவனே ஆள் வர வைத்து இடித்து விட்டான்.
அந்த வீடு தரைமட்டம் ஆகிவிட்டது. அடுத்த வாரம் எங்க அம்மா, அந்த வீட்டுக்கு விளக்கேற்ற வரும் போது வீட்டைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்புறம்தான் இடித்த விஷயத்தை நான் அம்மாவிடம் சொன்னேன். அவங்க "படத்துலதான் இப்படினா, நேர்லையும் இப்படிதான் இருப்பீங்களா'னு கேட்டார்கள். அதுதான் ஆர்யா.