சூர்யாவின் 46-ஆவது படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-இல் திரைக்கு வருகிறது. மற்றொரு பக்கம் அவருடைய 47-ஆவது படத்தை, 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டன.
அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 'கே.ஜி.எஃப்', 'காந்தாரா' போன்ற படங்களைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 'கருப்பு' படத்தைத் தொடர்ந்து சாய் அபயங்கர், சூர்யாவின் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.
கயாடு லோஹர் நாயகியாகக் கமிட் ஆகியிருக்கிறார். 'ஜெய் பீம்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடம் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனுஷ்
தனுஷ், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையாவது சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபடுகிறார். அதற்காகவே ஒரு வாரக் காலத்தை ஒதுக்கி வைத்துவிடுகிறார். தாய், தந்தை, சகோதரன், சகோதரிகளுடன் குடும்பமாகச் செல்லும் நிகழ்வாக அது அமைந்து விடுகிறது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கருப்பசாமிதான் நடிகர் தனுஷுக்குக் குலதெய்வம். வருடத்துக்கு ஒரு முறை அவருடன் அவரது சகோதரரும் இயக்குநருமான செல்வராகவன், தந்தை கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி, மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோரும் குல தெய்வ கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
அங்குள்ள ஊர் பொது மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்து, அவர்களுடன் குடும்ப சகிதமாகப் பேசி உரையாடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் தனுஷ்.
சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அபார்ட்மென்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் சல்மான் கானுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஒரு வீட்டில் குடியேற சல்மான் கான் முடிவு செய்துள்ளார். தற்போது வசிக்கும் கேலக்ஸி அபார்ட்மென்ட்டுக்கு அருகில் 70 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடிக் கட்டடத்தை சல்மான் கான் குடும்பம் வாங்கி இருக்கிறது. அந்த இடத்தில் ஆறு மாடியில் புதிய வீடு கட்ட சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா
வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக் கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சமையல், சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், 'பெண்கள் வீட்டுப் பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்களுக்கு பெரும்பாலும் அவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வீட்டு வேலைகளை பாலினத்துடன் இணைக்கக் கூடாது. சுத்தம் செய்வதும், சமைப்பதும் பெண்களின் வேலையல்ல'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







