1. இடம் மாறிய பாடல்!
கடைச்சங்கப் பாண்டிய மன்னருள் இறுதியாக வாழ்ந்தவன் உக்கிரப்பெருவழுதி என்பார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை. அப்பாண்டிய மன்னனே அகநானூற்றைத் தொகுத்தவன். அவன் பாடல் ஒன்றும் (அகம். 26) அத்தொகை நூலில் இடம்பெற்றுள்ளது. அவனது பாடல் ஒன்று நற்றிணையிலும் (98) காணப்படுகிறது. இதனால் அகநானூறும் நற்றிணையும் சம காலத்தவை என்பது புலனாகிறது.
நற்றிணையைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. அத்தொகையில் அவன் பாடல் ஒன்றும் (301) உள்ளது. அவன் புனைந்த பாடல் ஒன்று குறுந்தொகையிலும் சேர்க்கப்பட்டுள்ளது. மாறன் வழுதியின் வெற்றிச்சிறப்பைக் குறிக்கும் அடைமொழியே "பன்னாடு தந்த' என்பது. இதனால் நற்றிணையும் குறுந்தொகையும் சமகாலத்தவை எனலாம்.
இவற்றைக்கொண்டு தொகை நூல்களுள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை மூன்றும் ஒரே காலத்தைச் சார்ந்தவை என்று தெளியலாம். இவற்றுள் குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. நற்றிணையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. அகநானூற்றைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்.
பூரி என்பது உப்பூரிகுடி என்பதன் மரூஉ என்றும், "கோ' என்பது "கிழார்' என்பதன் மாற்று வடிவம் என்றும் கொள்வதற்கு இடமுண்டு. சேக்கிழாரைச் "சேவையர் கோ' என்று உமாபதிசிவம் குறிப்பது இப்படிக் கருதத் துணை நிற்கிறது.
இவ்வாறு கொண்டால், குறுந்தொகையையும் நற்றிணையையும் தொகுத்தவர் பூரிக்கோ என்றும், அகநானூற்றைத் தொகுத்தவர் அவர் மகனார் உருத்திரசன்மர் என்றும் கொள்ளலாம்.
1940-ஆம் ஆண்டு நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு நாள்களில் சென்னையில் குறுந்தொகை மாநாடு நிகழ்ந்துள்ளது. அதில் நிகழ்ந்த சொற்பொழிவுகள், "குறுந்தொகைச் சொற்பொழிவுகள்' என்று நூலாகவும் வந்துள்ளது.
அதில் நெய்தல் திணைபற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ள வித்துவான் இராஜசிவ. சாம்பசிவ சர்மா என்பவர், 9 அடிப் பாடல்கள் இரண்டு குறுந்தொகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ""குறுந்தொகையைச் சார்ந்தனவாகவும் இக்காலப் பதிப்புகளிலும் ஏட்டுப் பிரதிகளிலும் காணப்படாதனவாகவும் குறுந்தொகைச் செய்யுட்கள் இரண்டுள்ளன'' என்று கூறி, அப்பாடல்கள் முறையே, "நன்றே' என்னும் தொடக்கத்தைக் கொண்ட பாடலும் நம்பியகப்பொருள் விளக்கத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள "இவளே நின்னலது இலளே' என்னும் பாடலும் ஆகும் என்று குறித்துள்ளார்.
இதனால், ""குறுந்தொகையில் நீக்கத்தக்கனவும் சேர்க்கத்தக்கனவும் உண்டுபோலும்'' என்னும் ஐயத்தைத் தெரிவித்துள்ளார். இக்கருத்து இதுநாள்வரை ஆராயப்படாமலே இருக்கிறது.
இவற்றுள் அவர் நீக்கத்தக்கன என்று கருதும் ஒன்பதடிப் பாடல்கள் இரண்டினைக் குறித்து முதலில் ஆராயலாம்.
கடம்பனூர்ச் சாண்டிலியன் பாடியுள்ள "வளைஉடைத் தனையது ஆகி' என்னும் 307-ஆம் பாட்டு எல்லா ஏட்டுப் படிகளிலும் ஒன்பது அடிகளைக் கொண்டதாகவே காணப்படுகிறது என்றும், "உவரி ஒறுத்தல்' என்னும் 391} ஆம் பாடல் சில படிகளில் எட்டடியாகச் சில வேறுபாடுகளுடன் எழுதப்பட்டுள்ளது என்றும் குறித்துள்ளார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இதனால் பின்னர் உள்ள பாடலில் ஏதோ சிக்கல் உள்ளது என்பது தெரிகிறது. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள காகிதப்படிகள் இரண்டினைப் பார்த்தபோது ஒரு படியில் (ஈ.244) பாடலின் பின் நான்கு அடிகள்.
""வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் கையறப்
பையுள் மாலைப் பூஞ்சினை யிருந்த
போழ்கண் மஞ்ஞை தாநீர் நனந்தலை
புலம்பக் கூவுந் தோழி பெரும் பேதையவே''
என்று பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீர் அமைப்புச் சரியாக இல்லை. இப்பகுதியின் முதலடியும், ஈற்றடியும் ஐந்துசீர் கொண்டனவாக உள்ளன. மேலும் ஈற்றயலடி முச்சீரடியாக அன்றி நாற்சீரடியாக வேறு இருக்கிறது.
""உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில்
கடிதுஇடி உருமின் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாநீர் நனந்தலை புலம்பக்
கூஉம் தோழி பெரும்பே தையவே''
என்பதே பாடலின் திருந்திய வடிவம். இவ்வாறே உ.வே.சா.வும் மர்ரே பதிப்பாசிரியரும் வெளியிட்டுள்ளனர்.
இப்பாடலில் மூன்று தொடர்கள் உள்ளன. "ஒருத்தல் மடியப் புறவில் பாம்பு அவிய வீழ்ந்தன்று என்பது முதல் தொடர். "வீழ்ந்த மாமழை தழீஇ வந்த மாலை பூஞ்சினை இருந்த மஞ்ஞை புலம்பக் கூவும் என்பது இரண்டாவது தொடர். "பெரும் பேதைய' என்பது மூன்றாவது தொடர்.
இதில் முதல் தொடருக்கு எழுவாய் இல்லை. மழை என்னும் எழுவாயை வருவிக்க வேண்டியுள்ளது. மூன்றாம் அடியில் வன்மையாக இடிக்கும் உருமேற்றினால் பாம்புகள் படம் சிதைய என்றதன் பின்னர் நான்காமடியில் மீண்டும் இடியொடு மயங்கி என்று வருவது கூறியது கூறல் ஆகிறது.
முதல்தொடர் "வீழ்ந்தன்று' என்று முற்றுப்பெற, இரண்டாம் தொடர் "வீழ்ந்த மாமழை' என்று அந்தாதி அமைப்பில் தொடங்குவதும் மிகையாகத் தோன்றுகிறது.
இவையேயன்றி மழை, சேர்ந்திருக்கும் தலைமகனுக்கும் தலைமகளுக்கும் மகிழ்ச்சியாகவும் பிரிந்துறையும் அவர்களுக்குத் துன்பம் தருவதாகவும் இருப்பதாகப் பாடுவதே அகப்பாடல் மரபு. இத்தொகை நூலில் உள்ள "தாழ்இருள் துமிய' என்னும் பன்னாடு தந்தான் பாட்டு, சேர்ந்தார்க்கு மழை மகிழ்ச்சி தருவதாய் இருத்தலைக் காட்டுவதாகவும். "அவரே, கேடில் விழுப்பொருள்' என்னும் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் பாட்டு, பிரிந்தார்க்கு அது துன்பம் பெருக்குவதாய் இருத்தலையும் எடுத்துரைக்கின்றன. ஆனால், "பிரிவிடை பருவவரவின்கண் ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது' என்னும் துறையில் அமைந்த இப்பாடலில், மழை "இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்று' என்பது "சுருதி பேதமாக' அமைகிறது. இத்துணை இடர்ப்பாட்டுக்கும் காரணமாக இருப்பது "இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே' என்னும் நான்காவது அடியே. இவ்வடியை நீக்கிவிட்டால், பொன்மணியாரின் இப்பாடல் எக்குறையுமின்றி உயர்ந்த பொன்மணியாகவே திகழ்கிறது.
பாடலின் முதல் ஏழரை அடிகள் ஒரு தொடராகவும், எஞ்சிய இருசீர்கள் ஒரு தொடராகவும் அமைந்து செறிவோடு திகழ்கிறது. ""தோழி, பன்றிகள் வெறுப்புற்று நிலத்தைக் கிளைக்காமல் சோம்பிக் கிடக்கவும், மான்கள் வெப்பத்தால் துன்புறவும், மழைபெய்யாமல் நீங்கிய முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கின்ற இடியினால் பாம்புகள் படம் அழியும்படி பெய்த பெருமழையோடு சேர்ந்துகொண்டு தம் தலைவரைப் பிரிந்து தனித்துறையும் மகளிர் செயலற்றுச் சோர்ந்து போகுமாறு வந்த துன்பம் தரும் இம்மாலைப் பொழுதிலே, பூக்களையுடைய கிளைகளில் இருந்த பிளவுண்ட கண்களையுடைய மயில்கள் பாயும் நீரையுடைய அகன்ற இடத்தின்கண் தனிமைத் துன்பம் மிகும்படி கூவுகின்றன. இவை மிக்க அறியாமை உடையன'' என்று தெளிவான பொருளைத் தருவதாக அமைகிறது.
இதனால் பொன்முடியார் பாடல் எட்டடிகளைக்கொண்ட பாடல் என்றும், எல்லா ஏடுகளிலும் ஒன்பதடியாகவே காணப்படும் 307-ஆம் பாடல் குறுந்தொகையில் தவறாகச் சேர்க்கப்பட்டது என்றும், அதுவே முற்றும் கிடைக்காமற்போன நற்றிணை 234-ஆம் பாடல் என்றும், ஒருவராலோ ஒரே வீட்டில் வாழ்ந்த தந்தை, மகன் ஆகிய இருவராலோ நற்றிணையும் குறுந்தொகையும் தொகுக்கப்பட்டபோது நற்றிணைப்பாடல் ஏடு மாறிக் குறுந்தொகையில் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும் தெளியலாம்.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

