திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருப்புகழில் யாப்பிலக்கணம்

முருகப் பெருமான், நக்கீரருக்கு "திருமுருகாற்றுப்படை' என்னும் நூலைப் பாட "உலகம் உவப்ப' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு உண்டு.

News image
Updated On :22 பிப்ரவரி 2014, 9:06 pm

முருகப் பெருமான், நக்கீரருக்கு "திருமுருகாற்றுப்படை' என்னும் நூலைப் பாட "உலகம் உவப்ப' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு உண்டு. இச்செய்தியை அருணகிரிநாதர் தாம் இயற்றிய திருப்புகழில் ""அடிமோனை சொற்கிணங்க உலகமுவப்ப என்று அருளால் அளிக்கும் கந்த பெரியோனே!'' என்று கூறியிருப்பதால் அறியலாம்.

"உலகம் உவப்ப' என்னும் சொற்றொடரில் உள்ள "உ' என்னும் மோனையை "அடிமோனை' என்று கூறியது சரியா என்னும் வினா எழுகிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு சீர்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருவதை இணைமோனை என்றுதான் தொல்காப்பிய உரையாசிரியர்களும் யாப்பருங்கலக்காரிகை ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, தொல்காப்பிய செய்யுளியலில் எங்கும் இணைமோனை பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இரண்டு அடிகளின் முதல் எழுத்து ஒன்றி வருவதுதான் அடிமோனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க, அருணகிரிநாதர் தொடர்ந்து வரும் இரண்டு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவதை அடிமோனை என்று குறிப்பிட்டது ஏன்?

"அடி' என்னும் சொல் "நெருங்கிய' என்னும் பொருளை உடையது. வாய்க்காலின் மிக அருகில் உள்ள வயலை "அடிமடை' என்றும், தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை "அடிக்கடி' என்றும், மலையை ஒட்டி உள்ள சாரல் பகுதியை "அடிவாரம்' என்றும் குறிப்பிடும் சொல்லாட்சிகளே இதற்குச் சான்று.

எப்போதும் உடன் இருந்து குற்றேவல் பணி புரியும் பெண் "அடித்தொழிலாட்டி' (சிலப்.கொ.கள.காதை -12) எனவும், எப்போதும் உடன் இருக்கும் தோழி "அடித்தோழி' (சிலப்-வா.காதை-3) எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் அடுத்தடுத்து வரும் இரண்டு சீர்களில் அமைந்துள்ள மோனையை "அடிமோனை' என்று கூறுவது முற்றிலும் சரியானது என்பது புலனாகிறது.

பக்தி இலக்கியத்தில் இலக்கணம் பற்றிய ஒரு கருத்தைப் பதிவு செய்த அருணகிரிநாதரின் இலக்கணப் பயிற்சியும் பரந்த அறிவாற்றலும் கற்போரை வியக்க வைக்கின்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.