

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களுள் திருப்புல்லாணியும் ஒன்று. இங்கே திருமால் தர்ப்பைப் புல்லின்மேல் சயனத் (கிடந்தான்) திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் சிறப்பினை, திருப்புல்லாணி வண்ணம், திருப்புல்லாணி மாலை, திருப்புல்லாணிப் பொன்னூசல், புல்லை அந்தாதி, தெய்வச்சிலையான் துதி, தெய்வச் சிலையான் வண்ண விருத்தம், புல்லாணிப் பெருமாள் கதவு திறத்தல் பாட்டு, புல்லாணிப் பெருமாள் நலுங்கு, திருப்புல்லாணி நொண்டி நாடகம், அசுவத்த விருட்சப்பாட்டு (அரசமரம்) முதலிய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன.
கோயிலுக்கு முன்பு உள்ள குளம் "சக்கர தீர்த்தம்' என அழைக்கப்பட்டுகிறது. குளக்கரையில், கோயில் வாயில் முன்பு நான்கு கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் வீரை ஆசுகவிராயர் என்ற புலவர் அரிச்சந்திர புராணத்தை, பெருமாள் முன்பு பாடி அரங்கேற்றினார். இம்மண்டபம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது என்பதை அம்மண்டபத் தூணில் காணப்படும் கல்வெட்டால் அறிய முடிகிறது.
அக்கல்வெட்டில் உள்ள செய்தி: ""திருப்புல்லாணி சுவாமி தேவச்சிலை பெருமாள் நயினார் சன்னதிக்கி மகாராயராணி ஸ்ரீசேதுபதி மங்களேசுவரி நாச்சியாரவர்கள் ஸ்ரீமதுமுத்து விசைய ரெகுநாத அண்ணாச்சாமி சேதுபதி ஆண்டவர் அவர்கள் உபயம்''
இராமேஸ்வரம் தலயாத்திரையில் திருப்புல்லாணித் திருக்கோயிலும் முக்கிய இடம் பெறுகிறது. திருப்புல்லாணி செல்லும்பொழுது தமிழுக்காக எடுக்கப்பட்ட மண்டபத்தைக் கண்டு மகிழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.