சங்க இலக்கியங்களில் யானையங்குருகு (குறுந்.34, மதுரை.674) எனும் பறவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பறவை யானையைப் போன்ற பெருங்குரலுடையது எனும் பொருளில் குஞ்சரக்குரல குருகு (அகம்.145) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நச்சினார்க்கினியர் வண்டாழங்குருகு என்கிறார்.
உ.வே.சாமிநாதையர், திருப்பாவையில் (பாடல்.7) குறிப்பிடப்பட்டுள்ள ஆனைச்சாத்தன் பறவை என்கிறார். பொ.வே.சோமசுந்தரனார் சக்கரவாகப்புள் என்றும், ஆனைச்சாத்தன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆனைச்சாத்தன் என்னும் பறவையைப் பற்றி அறிஞர் பி.எல்.சாமி ஆராய்ந்துள்ளார். இப்பறவையை, யானையை இறாய்ஞ்சிச் செல்லும் அளவு வலிமையுடைய பறவையெனும் பொருளில், மலையாள நாட்டில் ஆனைராஞ்சி என்றழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இமயமலை அருகில் வாழும் "குக்கி' என்ற மலைக்குடிகளின் அரசன் பழங்காலத்தில் இக்குருவியின் இறக்கையை அரசுச் சின்னமாகத் தலையில் அணிவதுண்டு என்றும், ஆப்பிரிக்காவில் காங்கோ நாட்டு மக்கள் இதனைத் தங்கள் மொழியில் "சினப்புலி' என்றும் வழங்குவதாக அவர் ஆராய்ந்துரைத்துள்ளார்.
இதனை, நன்னூல் உரையாசிரியர் சிவஞானமுனிவர் வயவன் என்கிறார். திருவிளையாடற்புராணம் "கோக்கயம்' என்கிறது. இவ்வளவு சிறப்பிற்
குரிய யானையங்குருகு என்பது, கரிக்குருவியில் ஒரு வகையான (நான்கு வகைகளுள்) "வலியன் பறவையே' என்று முடிவு கூறியுள்ளார்.