கவி பாடலாம் வாங்க - 22
கட்டளைக் கலித்துறை என்பது ஒரு வகை. கட்டளை என்பது கணக்கு என்ற பொருளையுடையது. எழுத்துக் கணக்கை உடைய பாடல்களுக்கு கட்டளை என்ற அடை இருக்கும். கட்டளைக் கலிப்பா அத்தகையது.


கலித்துறை வகை-2
கட்டளைக் கலித்துறை என்பது ஒரு வகை. கட்டளை என்பது கணக்கு என்ற பொருளையுடையது. எழுத்துக் கணக்கை உடைய பாடல்களுக்கு கட்டளை என்ற அடை இருக்கும். கட்டளைக் கலிப்பா அத்தகையது.
கட்டளைக் கலித்துறையும் நான்கு அடிகளும் அடிக்கு ஐந்து சீரும் உடையது. ஆனால், அளவு ஒத்து வருவதன்று. அளவொத்து வருவதாவது, மாச்சீர் ஓரடியில் வந்தால் மற்ற அடிகளில் அவ்விடத்தில் மாச்சீரே வருவது. இப்படியே மற்றச் சீர்களும் வரும். கட்டளைத் கலித்துறையில் இந்த வரையறை இல்லை.
இதற்கு எழுத்துக் கணக்கு உண்டு. நேரை முதலாக உடைய அடியில் ஒற்றை நீக்கிப் பதினாறு எழுத்துக்களும், நிரையை முதலாக உடைய அடியில் பதினேழு எழுத்துக்களும் அமைய வேண்டும்.
ஆசிரியச் சீர், வெண்சீர் என்னும் இரு வகைச் சீர்களே இந்தப் பாடலில் வரும். அதாவது, மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் என்பனவே வரும். ஒவ்வோரடியிலும் கடைசீச் சீர் மாத்திரம் விளங்காய்ச் சீராக இருக்கும்; மற்றவற்றில் காய்ச்சீர் வந்தால் மாங்காய்ச் சீர்களாகவே இருக்கும். ஒவ்வோர் அடியிலுமுள்ள ஐந்து சீர்களிடையிலும் வெண்டளை அமைய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஆனால், முதலடியின் ஈற்றுச் சீருக்கும், அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை இருக்க வேண்டியதில்லை. நேரை முதலாக உடைய பாட்டில் இங்கும் வெண்டளை இருக்கும்.
வெண்டளை மேலே சொன்ன வகையில் வந்து, ஐந்து சீர்களில் ஈற்றுச் சீரில் மட்டும் விளங்காய்ச் சீர் வந்து அமைந்தால் எழுத்துக் கணக்குச் சரியாக இருக்கும். எழுத்தை எண்ணிப் பாட வேண்டாம். முன் சொன்ன இலக்கணம் இருந்தால் நிச்சயமாக எழுத்துக் கணக்குத் தவறாமல் இருக்கும்.
"நாளென் செயும்வினை தானென்
செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென்
செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
தண்டையுஞ் சண்முகமும்
தோளுங் கடம்பு மெனக்குமுன்
னேவந்து தோன்றிடினே'
இந்தப் பாட்டில் நாளன், தாளென், கோளென், கூற்றென், தாளுந், தோளுங் - என்பவை தேமாச் சீர்கள். சிலம்புஞ், கடம்பு -என்பன புளிமாச்சீர்கள். இவற்றின் முன் நிரை வந்துள்ளது. செயும்வினை, செயுமெனை, செயுங் கொடுங், செயுங்கும, சதங்கையுந், மெனக்குமுன் என்பன கருவிளச் சீர்கள். தண்டையும் என்பது கூவிளச்சீர். இவற்றின் முன் நேர் வந்தது. இவ்வாறு வெண்டளை அமைந்தது காண்க. ஒவ்வோரடியின் ஈற்றுச் சீரும் விளங்காய்ச் சீராக வந்திருக்கிறது. நாடிவந்த (கூவிளங் காய்), ரேசரிரு (கூவிளங்காய்), சண்முகமும் (கூவிளங்காய்), தோன்றிடினே (கூவிளங்காய்) என்பவற்றைக் காண்க. கருவிளங்காயும் வரலாம். இறுதியில் ஏயில் முடியும்.
கந்தர் அலங்காரம் முழுவதும் கட்டளைக் கலித்துறையால் ஆனது. கோவை நூல்கள் யாவுமே கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. அவற்றைப் படித்துக் கட்டளைக் கலித்துறை பாடக் கற்றுக்கொள்ளலாம்.
கலித்துறைகளில் ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.
(தொடர்ந்து பொடுவோம்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...