புகழுடையார் அடையும் மேன்மை
அறம் இருவகைப்படும். அவை: இல்லறம்; துறவறம். வள்ளுவர் இல்லறம் பற்றித் திருக்குறளின் 5-ஆவது அதிகாரம் தொடங்கி (இல்வாழ்க்கை) 23-ஆவது அதிகாரம் ஈகை முடிய 19 அதிகாரங்களில் கூறினார்.


அறம் இருவகைப்படும். அவை: இல்லறம்; துறவறம். வள்ளுவர் இல்லறம் பற்றித் திருக்குறளின் 5-ஆவது அதிகாரம் தொடங்கி (இல்வாழ்க்கை) 23-ஆவது அதிகாரம் ஈகை முடிய 19 அதிகாரங்களில் கூறினார். அவ்வில்லற ஒழுக்கத்தில் தவறாமல் நடந்தோர் இப்பிறப்பில் அடையும் பயன் - அழியாது நிற்கும் புகழ் ஆகும். இவ்வதிகாரத்தில் 3, 4 குறட்பாக்களில் புகழ் உடையார் அடையும் மேன்மையைக் கூறுகிறார்.
"நிலவரை நீர் புகழாற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு' - (குறள்-3)
"ஒருவர் இவ்வுலகில் அழியாது நிற்கும் புகழைச் செய்தால், தேவ உலகம் அவரையன்றித் தன்னை அடைந்து நின்ற ஞானிகளை நன்கு மதியாது' - என்பது இதன் பொருள். இம்மையில் புகழைத் தேடாமல், அறிவை மட்டும் பெற்று யோக முதிர்ச்சியால் மறுமையில் தேவ உடலைப் பெற்றவர்களினும், இம்மையில் புகழையும் ஈட்டி, தானம் முதலியவற்றின் பயனால் மறுமையில் தேவ உடலையும் பெற்றவர்களுக்குத் தேவ உலகில் மிக்க சிறப்பு நடக்கும் என்பதாம்.
"நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது' (4)
நிலையில்லாத செல்வத்தையும் உடம்பையும் கொண்டு, நிலையான புகழைப் பெறுவது மிக்க சாமர்த்தியம் என்பது இதன் திரண்ட பொருள். ÷நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும், உளது ஆகும் சாக்காடும் - (புகழுடம்பு) உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் - சதுரப்பாடு உடையார்க்கு அல்லது, அரிது - இல்லை.
நந்து என்னும் தொழிற்பெயர், விகாரத்தால் "நத்து' என்று ஆகி, பின், "அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதி பெற்று, "நத்தம்' என்றாயிற்று. அதாவது, பொருந்து, திருந்து - என்னும் பகுதிகள், பொருத்தம், திருத்தம் - என நிற்றல் போல, நந்து - என்னும் பகுதி நத்தம் என நின்றது. பகுதியே தொழிற்பெயர் பொருளாதலால், அம் - பகுதிப் பொருள் விகுதி என்றார். (இருமை வகை தெரிந்து - (பிறப்பு வீடு என்னும்) இரண்டினது (துன்ப இன்பக்) கூறுபாடுகளை (குறள் 23). இங்கு இருமை என்பதில் மை - விகுதி தன்மையை உணர்த்தாமல், தன்னமையை உடைய பொருளையே உணர்த்தியதும் பகுதிப் பொருள் விகுதியே.
போல் - என்பது இங்கு உரையசையாகும். ஒப்பில் போலி. உவமைப் பொருள் உணர்த்தாத "போல்' - என்னும் சொல், "ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்' - என்னும் தொல்காப்பியத்தால் இது உரையசையாயிற்று. அதாவது - சிறிது பொருளுணர்த்தி வாக்கியத்தை அலங்கரித்து நிற்பது.
÷நத்தம் போல் கேடு - வளர்தல் போலக் கெடுதல்; புகழ் வளரச் செல்வம் குறைதல்; உளதாகும் சாக்காடாவது - புகழுடம்பு நிற்க பூத உடம்பு இறத்தல். நிலையாத செல்வத்தை - ஈதல் இசைபட வாழ்தல் - என்னும் முறைமையில் கொடுத்து, நிலையான புகழுடம்பு பெற வித்தகராலேயே இயலும் வித் - வித்து - ஞானம்; அதை மனத்தில் உடையவர் வித்தகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...