ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மூன்றின் தன்மையும் ஒன்றே!

வானவில், விஷ்ணு, வெற்றிலை ஆகிய மூன்றையும் குறித்துக் காளமேகப் புலவர் பாடிய நயமான சிலேடைப் பாடல் ஒன்று. நீரில் தோன்றுவதாலும், ஒரே நிறத்தை உடையதாலும், நோயையும் பகையையும் அழிப்பதாலும்,  மக்களின்

News image
Updated On :27 ஜூன் 2021, 3:20 pm

நெ. இராமன்


வானவில், விஷ்ணு, வெற்றிலை ஆகிய மூன்றையும் குறித்துக் காளமேகப் புலவர் பாடிய நயமான சிலேடைப் பாடல் ஒன்று. நீரில் தோன்றுவதாலும், ஒரே நிறத்தை உடையதாலும், நோயையும் பகையையும் அழிப்பதாலும்,  மக்களின் துன்பத்தைப் போக்குவதாலும் வானவில், விஷ்ணு, வெற்றிலை ஆகிய இம்மூன்றின் தன்மையும் ஒன்றே (சமம்) என்கிறார் காளமேகம்.

நீரி லுளவா னிறம்பச்சை யாற்றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
பல்வினையை மாற்றுதலாற் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை.
 

வானவில்

நீரி லுளவா -  வானவில்லானது மேகத்திலுள்ள நீரில் தோன்றுகிறது. பச்சையால் -  பச்சை நிறம் கொண்டது (ஏழு வண்ணங்களில் அதன் முக்கிய நிறம் பச்சை). திருவால் - அது மழை பெய்வதற்கு மங்கலமான (திரு) அடையாளமாக விளங்குகிறது. பாரிற் பகை தீர்க்கும் பான்மையால் - உலகத்தில் மழைபொழியச் செய்து வறுமை பகையைப் (நோயை) போக்குகிறது. சாருமனுப் பல்வினையை மாற்றுதலாற் - மனித இனத்தைச் சாரும் பல துன்பங்களையும் நீக்குகிறது.

விஷ்ணு

பாற்கடலில் (நீரில்) பள்ளிகொண்டிருக்கிறார். பச்சை நிறம் உடையவர். "திரு'மகளை (லட்சுமி) தேவியாக உடையவர்.  உலகத்திலுள்ள அசுரர்களை ஒழித்துப் பகை தீர்க்கும் திறமையுடையவர். மக்களைச் சார்ந்த பல வினைத் துன்பங்களையும் நீக்குகின்றவர். 

வெற்றிலை

நீரில் நனைத்துப் பயன்படுத்தப்படுகிறது. நீர்க்கால்களில் உள்ள கொடிக்காலில் பயிராகிறது. பச்சை நிறம் கொண்டது. மங்கலப் பொருளாய்  உள்ளது. 

உலகத்தில் பகை தீர்த்துச் சமாதான அடையாளமாய் (பகைவர்கள் சமாதானமானதற்கு அடையாளமாக வெற்றிலைப் பாக்கை பரிமாறிக்கொண்டு அதைத் தரிப்பது வழக்கம்)  உள்ளது. இதனால் பகையை ஒழிக்கிறது. 

மனிதர்களுக்கு வரும் பலவகையான நோய்களைத் தீர்க்கும் இயல்புடையது. ஆதலால்,  "வில் விண்டு வெற்றிலை நேர் பாரீர்' - வானவில்லும், திருமாலும், வெற்றிலையும் (ஒன்றே) சமம் என அறிக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.