அடுத்தோன் றிரந்தார்க்கொன் றீந்தாரைக் கொண்டார்
படுத்தேழை யாநென்று போகினும் போக!
அடுத்தேறல் ஐம்பாலாய் யாவர்க்கே யாயினும்
கொடுத்தேழை யாயினார் இல். (பாடல்-218)
நெருங்கி வளர்ந்திருக்கின்ற, இருள்போன்ற, கரிய, ஐவகையாக முடிக்கும் கூந்தலை உடையவளே! தம்மை வந்து அடைந்து ஒன்றை யாசித்து நின்றவர்களுக்கு அந்த ஒரு பொருளைக் கொடுத்தவர்களை; அப்படிக் கொண்டவர்களே பிற்காலத்து "இவர் ஏழையாவர்' என்று சொல்லிப்போனாலும் போகட்டும்; எத்தகையவர்களுக்கே ஆனாலும் கொடுத்து அதனால் ஏழையானவர் எவரும் இல்லை. "கொடுத்தேழை யாயினார் இல்' என்பது பழமொழி.