இந்த வாரம் கலாரசிகன் - 09-02-2025

மகாராஷ்டிர ஆளுநர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று மும்பை ஆளுநர் மாளிகையில் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
இந்த வாரம் கலாரசிகன் - 09-02-2025
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிர ஆளுநர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று மும்பை ஆளுநர் மாளிகையில் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மூன்று புறமும் கடல் சூழ, ரம்மியமான பூந்தோட்டங்களுக்கு இடையே அமைந்திருக்கிறது மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள மும்பை ஆளுநர் மாளிகை.

1885-ஆம் ஆண்டுமுதல் ஆளுநர் மாளிகையாகத் திகழும் அதில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருப்பதை அங்கிருக்கும் அதிகாரிகள் விளக்கினர். ஜல் பூஷண், ஜல் லக்ஷண், ஜல் சிந்தன், ஜல் சபாகிருஹ, ஜல் விஹார் என்று விருந்தினர்களுக்காக பல பங்களாக்கள் அதில் அமைந்திருக்கின்றன.

ஸ்ரீபிரகாசா, பி.சுப்பராயன், விஜயலட்சுமி பண்டிட், சங்கர் தயாள் சர்மா, பிரமானந்த ரெட்டி, சி.சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் இருந்த அந்த ஆளுநர் மாளிகையில், நமது சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பது பெருமையாக இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் நல்லவராக அவர் வளைய வருகிறார் என்று ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

ஆளுநர் மாளிகையில் நான் சென்று தங்கியதில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. நவி மும்பை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஆளுநராக இருக்கும் நம் ஊர்க்காரரை எப்படி சந்திப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கச் செயலாளர் முகுந்தன் மூலமாக, நான் மும்பை ஆளுநர் மாளிகையில் தங்கி இருப்பது தெரிந்து என்னைச் சந்திக்க வந்தனர்.

ஆளுநரை நான் சந்தித்தபோது அவரிடம் விவரம் தெரிவித்தேன். அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு உடனே உத்தரவு பிறந்தது. நவி மும்பை தமிழ்ச் சங்கத்தாருக்கு உதவ முடிந்ததில் எனக்குப் பரம திருப்தி.

என்னை சந்திக்க வந்திருந்த நவி மும்பை தமிழ்ச்சங்கத் தலைவர் வழக்குரைஞர் திருமதி.ராஜஸ்ரீ நாகராஜன், துணைத் தலைவர் நாராயணன், செயலாளர் மீனாட்சி வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஏகாம்பரம், பொன். முருகன் ஆகியோர் ஓர் அதிர்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.

தில்லியில் எல்லா மாநிலங்களுக்கும் 'தமிழ்நாடு இல்லம்' போலத் தனித்தனியாக அந்தந்த அரசுகளுக்கான விருந்தினர் இல்லங்கள் இருப்பதுபோல, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையிலும் எல்லா மாநிலங்களும் தங்களது அரசினர் விருந்தினர் மாளிகையை அமைத்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கேரளம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், கோவா, குஜராத், ஒடிஸா என்று அநேகமாக எல்லா இந்திய மாநிலங்களுக்கும் மும்பையில் பிரம்மாண்டமான அரசினர் இல்லங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. செயல்படுகின்றன.

மிஸோரம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்கள்கூடத் தங்களுக்கு மும்பையில் சிறப்பான அரசினர் இல்லமும், செயலகமும் வைத்திருக்கின்றன. நமது தமிழகத்துக்கு மும்பையில் அப்படியொரு அரசினர் இல்லம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார்கள் நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தினர்.

அந்த வெளி மாநிலத் தமிழர்களின் தமிழ்ப் பற்று என்னை நெகிழ வைத்தது. நம்மவர் ஒருவர் மகாராஷ்டிர ஆளுநராக இருக்கிறார். அந்த வாய்ப்பைத் தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டு, மும்பையிலும் 'தமிழ்நாடு இல்லம்' பிரம்மாண்டமாக உயர வேண்டும். முதல்வரின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தில்லிக்கு விமானத்தில் செல்லும்போது படிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகம் 'இலக்கியக் கலையும் பாரதி நிலையும்'. செய்தித் தாள்கள், இதழ்கள் ஆகியவற்றில் வெளியான தொ.மு.சி.ரகுநாதனின் கட்டுரைகள் சிலவும், கையெழுத்துப் படிகள் சிலவும் நூல் வடிவம் பெறாமல் இருந்திருக்கின்றன. அவற்றை பாரதியியல் ஆய்வாளர் மறைந்த இளசை மணியன் சேகரித்து வைத்திருந்தார்.

எட்டயபுரத்தில் தொ.மு.சி. ரகுநாதன் நிறுவிய நூலகத்தை இளசை மணியன் பொறுப்பேற்று நடத்தி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். முனைவர் சு.துரையும், முனைவர் ரெ.இந்திராவும் பழுதடைந்த நிலையில் இருந்த இளசை மணியனின்

சேகரிப்புகளைக் கையெழுத்துப் படிகளாகத் தயார் செய்து அச்சிட்டு வெளிவர உதவி இருக்கிறார்கள்.

'மல்லிகை' இதழில் கைலாசபதி 1982-இல் தொ.மு.சி. ரகுநாதன் பற்றி எழுதிய கட்டுரையையே இந்தப் புத்தகத்தின் அணிந்துரையாக வெளியிட்டிருப்பது தனிச்சிறப்பு. தமிழ் இலக்கியம், பாரதியார் தொடர்பான 13 கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரை குறித்தும் ஒரு கட்டுரை எழுதலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு ஆழமும், செறிவும் மிக்க கட்டுரைகள்.

தொ.மு.சி. ரகுநாதனின் சாகித்திய அகாதெமி விருது ஏற்புரை, பாரதியார் பாடல்களால் தமிழர் அடையும் பலன், உலக மொழிகளில் பாரதியின் நூல்கள் பிரசுரம், ஆறில் ஒரு பங்கு - தடை செய்யப்பட்டது ஏன்? என்கிற நான்கு கட்டுரைகளையும் தமிழ்மணியில் மீள் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது அவா.

புதுக் கவிதை, வசன கவிதை குறித்து ரகுநாதன் என்ன நினைக்கிறார் என்பதைக் 'கவிதையும் இலக்கணமும்' கட்டுரை தெரிவிக்கிறது. 'தமிழிலே வசனத்தில் கவிதை கிடையாது - பிறக்காது. தமிழ்க் காதுகள்

இசையிலே, சப்த சித்திரத்தின் ஜால விசிறியிலே ஊறிப்போனவை. எதுகையும் மோனையும் தமிழ்க் காதுக்கு இன்றியமையாத கவிதை உணர்ச்சிகள்' என்று கூறும் ரகுநாதன், பாரதியின் வசன கவிதையையுமேகூட மனமார ஏற்றுக்கொள்ளவில்லை. 'இந்தப் புதிய பாதையின் வெற்றியைப் பற்றி இனிமேல்தான் முடிவுகூற முடியும்' என்றவருக்கு வாழ்க்கை அதற்கான வாய்ப்பை வழங்காமல் விட்டதுதான் சோகம்.

'அந்தி மழை' இதழில் ராஜா சந்திரசேகர் எழுதிவந்த 'அகம் முகம்' புத்தக வடிவம் பெற்றுப் பல ஆண்டுகளாகி விட்டன. அதன் கடைசிப் பக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தக் கவிதையை நான் எனது டைரியில் குறித்து வைத்திருக்

கிறேன்-

எல்லாப் பிரிவும்

சந்திக்க வேண்டும்

என்று அவசியமில்லை.

எல்லாச் சந்திப்பும்

பிரிய வேண்டும்

என்று நிர்பந்தமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com