

மும்பையிலிருந்து அகமதாபாத் சென்று, அங்கிருந்து 5 கி.மீ சென்றால், பிரபாஸில் உள்ள சந்திரபாகாவின் ஆலயத்தை அடையலாம். 51 சக்தி பீடங்களில் 19வது பீடமாக விளங்கும் இத்தலத்தில், தேவியின் உடற்கூறுகளில் வயிற்றின் முதல் மடிப்பு விழுந்ததாகக் கருதப்படுகிறது. பிரபாஸில் தேவி சந்திராபாகா என்ற திருநாமத்துடனும், இறைவன் வக்ரதுண்டர் (பத்ரúஸன்) என்ற திருநாமத்துடனும் அருள் பாலிக்கின்றனர்.
தட்சனுக்கு 27 மகள்கள் இருந்தனர். அழகிலே சிறந்தவனாகிய சந்திரனுக்கு 27 பெண்களையும் மணமுடித்து வைத்தார். இதில் ரோகிணி என்பவளிடம் மட்டும் அதிக அன்பினைக் கொண்டவனாக இருந்தான் சந்திரன். அதன் காரணமாக மிகவும் வருந்திய மற்ற பெண்கள் சந்திரன் தங்களை அலட்சியப்படுத்தியதைத் தங்கள் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். சந்திரனை அழைத்து அவனது போக்கை மாற்றிக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்தார் தட்சன்.
தட்சனின் எச்சரிக்கையை சந்திரன் பொருட்படுத்தவில்லை. அதனால், சந்திரன் தன்னை அலட்சியம் செய்ததாகக் கருதினார் தட்சன். கடுங்கோபம் கொண்டு, சந்திர கலைகள் அனைத்தும் அழிந்து அவன் பொலிவு நலியும்படி சாபம் இட்டார். அந்த சாபத்தின் காரணமாக சந்திர கலைகளை இழந்து நலியத் தொடங்கினான் சந்திரன். தன் நிலையை எண்ணி சித்தம் கலங்கிய சந்திரன், தட்சனின் சாபத்திலிருந்து விடுபட சிவபெருமானிடம் சரணடைந்தான்.
சந்திரன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனைத் தன் தலையில் சூடியதோடு, அவனது கலைகள் வளர்வதற்கும் அருள் புரிந்தார். சோமன் என்ற பெயர் கொண்ட சந்திரன், பிரபாஸில் வந்து ஜோதிர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சோமனால் பிரதிஷ்டை செய்யப் பட்ட ஈசன் சோமநாதர் என்று அழைக்கப்பட்டார்.
சந்திரபாகா என்றால் சந்திரனின் கிரீடம் என்று பொருள். சந்திரனுடன் தொடர்புடைய இந்த பிரபாஸில்தான் அன்னையின் வயிற்று மடிப்பு விழுந்து சக்தி பீடம் ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.