

மேற்கு வங்க மாநிலம், பிர்பம் மாவட்டத்தில் அமைந்துள்ளது நந்திகேஷ்வரி ஆலயம். அம்மனின் உடற்கூறுகளில் கழுத்தின் எலும்புகள் விழுந்த இடத்தில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் நந்திகேஷ்வரி ஆலயம் 14வது பீடமாகத் திகழ்கின்றது. இங்கே அன்னை நந்தினி என்ற திருநாமத்துடனும், இறைவன் நந்திகேஷ்வர் என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியுள்ளனர்.
பிர்பம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த முக்கிய கோயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது நந்திகேஷ்வரி ஆலயம். இங்கே அன்னை விஷ்ணுவின் அவதாரமான கூர்ம அவதாரம் எடுத்து, ஆமை போன்ற வடிவில் காட்சியளிக்கிறாள். கருவறையில் அமைந்துள்ள அன்னையின் உடல் முழுவதும் குங்குமத்தைக் கொண்டு சிறப்பாக அலங்காரம் செய்யப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள அன்னை மூன்று தங்கக் கண்களோடு காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு.
இவ்வாலயத்தில் யாக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக பெüர்ணமி, புத்த பூர்ணிமா ஆகிய நாட்களில் யாகம் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்பு பூஜையாக அமாவாசை தினத்தன்று காளி பூஜை நடத்தப்படுகிறது.
கோயிலில் தினமும் மதிய வேளையில் அன்னைக்கு நைவேத்யமாக அன்னம் படைத்து பூஜிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள் நந்திகேஷ்வரி.
இத்திருத்தலத்தில் நந்திகேஷ்வரர் பைரவராக விளங்குகிறார். கோயில் வளாகத்தினுள் விஷ்ணு, அனுமன், ராமர், சீதை, நவதுர்கா எனத் தனித்தனி சந்நிதிகளும் உள்ளன. கோயிலுக்குள் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிறு கட்டி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது மக்களின் நம்பிக்கை.
தாங்கள் நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தி இங்குள்ள நந்திகேஷ்வரி அன்னைக்கு இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.