

மேற்கு வங்க மாநிலத்தின், கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் தாம்லுக் எனும் துறைமுகத்தில் அமைந்துள்ளது கபாலினி தேவி ஆலயம். அன்னையின் 51 சக்தி பீட வரிசையில், 38வது பீடமாக விளங்கும் இந்தத் தலம் அன்னை தாட்சாயணியின் உடற்கூறுகளில் இடது கால் கொலுசு விழுந்த இடமாகக் கருதப்படுகின்றது.
இங்கே சக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னையின் திருநாமம் கபாலினி. úக்ஷத்ரபாலர் ஸர்வாநந்தர் அல்லது பீம பைரவர். இந்த நாயகியை சிலர் காளிமாதா என்றும், தாராதேவி என்றும் அழைக்கின்றனர். தச மகா வித்யைகளில் முதல் ரூபம் காளி. இரண்டாவது ரூபம் தாரா என்பர்.
ஒருமுறை தட்சன் பெரும் யாகம் ஒன்றை மேற்கொண்டார். அந்த யாகத்திற்கு தாட்சாயணியை அழைத்தார். அந்த யாகத்துக்குச் செல்ல விரும்பி, பரமசிவனிடம் அனுமதி கேட்டார் தாட்சாயணி. தனக்கு ஹவிர் பாகம் அளிக்காமல் தட்சன் யாகம் நடத்துவதால் தாட்சாயணி செல்வதற்கு அனுமதி மறுத்தார் சிவபெருமான். இதனால் கோபம் கொண்ட அன்னை கோப உருவாக காளி உருவெடுத்தாள். இதைக் கண்ட பரமசிவன் யாகத்துக்குச் செல்ல அனுமதித்தார்.
தச மகா வித்யையில் இரண்டாவது ரூபமாகக் கூறப்படுவது தாரா தேவி. தாரா என்றால் தாண்டும் சாதனம், மிதக்கும் பொருள் என்பர். தாரகா எனும் சம்ஸ்கிருத சொல்லுக்கு நட்சத்திரம் என்று பொருளும் உண்டு. இந்த தேவி தன் இடக்காலை நீட்டி, வலக் காலை சற்று மடக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். துர்வாசர், வியாஸர், வால்மீகி, பரத்வாஜர் ஆகியோர் இவ்வன்னையை ஆராதித்து பெரும் பேறு பெற்றனர்.
தாம்லுக் நகரில் உள்ள மகாசக்தி பீடம் பார்கவி மாதா மந்திர் எனப்படுகிறது. கருவறை நாயகி கபாலினி தேவி, இடக் கரங்களில் கபாலமும், வெட்டப்பட்ட ஓர் அசுரனின் தலையும் கொண்டவளாகக் காட்சியளிக்கிறாள்.
இவ்வன்னையை தரிசிக்க வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மகர சங்கராந்தியை ஒட்டி இங்கே திருவிழா கொண்டாடப்படுகிறது. அதை பரூணி மேளா என்பர். இந்த தேவி மக்களின் அஞ்ஞானத்தைத் தன் கையில் உள்ள கபாலத்தில் போட்டுப் பொசுக்கியபடி, மூவுலகத்தையும் காக்கும் கபாலினியாக விளங்குகிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.