திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பஞ்சத்தைப் போக்கிய பரமன்!

காசியில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க பார்வதி தேவி அன்னபூரணியாக சிவபெருமானின் பிட்சைப் பாத்திரத்தில் உணவு இட்ட நாள் அட்சய திருதியை.

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 12:02 pm IST

காசியில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க பார்வதி தேவி அன்னபூரணியாக சிவபெருமானின் பிட்சைப் பாத்திரத்தில் உணவு இட்ட நாள் அட்சய திருதியை. இத்தினத்தில் அன்னபூரணியை வழிபட்டால் உணவுக்குப் பஞ்சம் ஏற்படாது. இது காசி தலத்துப் புராண வரலாறு.

ஆனால், அருளாளன் என்னும் மறையவன் பஞ்சத்தினால் பசியால் வருந்துகின்றபோது, பெருமான் அம்மறையவனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் வழங்கி அவனது பசிப்பிணியை நீக்கியருளியது மட்டுமில்லாமல் அவன் மூலம் ஊர் மக்களுக்கும் உணவு வழங்கி, பஞ்சத்தைப் போக்கிய பரமன் வீற்றிருக்கும் தலம் தென்னகத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகே "திருச்சோற்றுத்துறை' என்ற பெயருடன் திகழ்கிறது.

தேவாரப்பதிகம் பெற்ற இத்தலம் 13ஆவது ஆகும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அருளிய பதிகங்கள் பெற்றது.

ஈசன் வழங்கிய அந்தப் பாத்திரத்துக்கு "உலவா சோற்றுக்கலம்' என்று பெயர். அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய பேரருளாளரான பெருமானுக்கு அருள்மிகு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி பூரண அருள் கடாட்சிக்கும் அம்மைக்கு அருள்மிகு அன்னபூரணி என்றும் இத்தலத்து அம்மையப்பனின் திருநாமங்கள்.

ஓதவனேஸ்வரர் சோற்றுதுறை நாதர் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. பழந்தமிழில் "ஓதம்' என்ற சொல்லுக்கு ஈரம், கடல், அலை, வெள்ளம், குளிர்ச்சி ஆகிய பிற பொருள்களோடு உணவு, சோறு ஆகிய பொருள்களும் காணப்படுகின்றன. திருவையாற்றைத் தலைமைத் தலமாகக்கொண்டு நிகழும் சப்தஸ்தான தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள அனைத்து இறைமூர்த்தங்களும் விசேஷமானவை. இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர் வழிபட்ட தலம் இறைவன் அட்சய பாத்திரம் நல்கி அடியவர்களின் பசிபோக்கி நல்ல மழை பொய்விக்கச் செய்து நெல் அமோகமாக விளையச் செய்வித்தான் என்றால், அம்பிகையோ தன் பங்கிற்கு அந்நெல்மணிகளைச் சோறாகவே விளையுமாறு அருள் செய்தாள் என்பது தலவரலாறு. எனவே இறைவி "அன்னபூரணி' எனப் போற்றப்படுகிறாள். இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வணங்குபவர்களுக்கு பசிப்பிணி நீங்குவதோடு பிறவிப்பிணியும் தீர்க்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

இத்திருத்தலத்தில் மே 2 அட்சய திருதியை அன்று காலை 10 மணிக்கு சிறப்பு ஆராதனையும், மாலையில் கண்ணாடிப் பல்லக்கு வெள்ளோட்டமும் நடைபெறுகிறது.

அமைவிடம்: தஞ்சை - திருவையாறு வழியில் கண்டியூருக்குக் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சோற்றுத்துறை.

தகவல்களுக்கு: 94435 86453

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.