அஹ்னஃபுப்னு கைஸ் என்ற அறிஞர் அவரின் காலத்தில் ஒரு சமூகத்தின் தலைவர். அவர் கட்டளை இட்டால் வாளேந்தி போர்புரிய லட்சத்திற்கு மேற்பட்ட லட்சிய வீரர்கள் இருந்தனர். அந்த அறிஞர் போரை விரும்பாத பொறுமையாளர். பிரபுக்கள் அந்த அறிஞரை அணுகி தீராத பிரச்னைகள் தீர நேரான ஆலோசனைகளைக் கேட்பர்.
பிரச்னைகளைப் பொறுமையாய் அலசி ஆராய்ந்து எளிதாக தீர்க்கும் ஏற்ற வழியை எடுத்துரைப்பார் அறிஞர்.
ஒருநாள் அவரிடம் வந்த ஒருவர், ""முருவத் என்னும் பெருந்தன்மை என்பது என்ன?'' என்று கேட்டார். ""பழிக்கத் தக்க செயல்களைத் தவிர்த்து மன்னிக்கும் தன்மையை கடைபிடிப்பதே'' என்று பதிலுரைத்து விளக்கினார். ""பிறர் வருந்த செயல்பட்டு அவர்களின் பழிப்புக்கு ஆளானவர் இழிவான நோய்களுக்கும் உள்ளாவார். பழிப்புக்கு ஆளாகாதவர் நோயுற்று இழிவுறாமல் நலமாய் வாழ்வார். பழிப்பைச் சம்பாதிக்காமல் இருப்பதே நோய்களுக்கு அருமருந்து. அதனால் அனைவரும் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யாது பழியஞ்சி வாழவேண்டும்''. இந்த அறிவுரையை உறுதிப்படுத்தும் உத்தம குர்ஆனின் சில வசனங்களையும் விளக்கங்களையும் காண்போம்.
""அல்லாஹ்வை நம்பியவர்கள் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் விட்டு விலகி இருப்பதோடு பிறரின் தகாத செயல்களால் கோபம் அடையினும் மன்னித்து விடுவார்கள்.'' என்று 42 -37 ஆவது வசனம் உரைக்க 4-149 ஆவது வசனம், ""நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் பிறர் செய்த தீங்கை மன்னித்தாலும் உங்களுக்கு மிக நன்று. ஏனெனில் அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும் மிக்க ஆற்றல் உடையவனாகவும் இருக்கிறான்'' என்று உறுதி செய்கிறது.
ஒருவர் மனிதர்களுக்குப் பயன்படும் நல்ல செயல்களைப் பலரறிய பகிரங்கமாகவும் பிறர் அறியாது மறைவாகவும் செய்யலாம். அச்செயல்கள் நல்ல நோக்கமுடைய நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும். மற்றவரும் அச்செயலைப் பலரும் அறிய செய்யலாம். அப்படி அறிய செய்வது ஒருவருக்குத் தற்புகழ்ச்சி என்று எண்ணினால் அதைப் பிறர் அறியாது மறைக்கலாம். ஒருவர் செய்த தீமையை திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருப்பது பழிக்குப் பழி வாங்கும் பாவத்திற்கு இழுத்துச் செல்லும். பழி அஞ்சி வாழ்வோர் பிறர் தீமையை மன்னித்து விடுவர். பழிக்குப் பழி செய்யார்.
"" நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றையே உண்ணுங்கள் என்று உரைக்கிறது 2-172 ஆவது வசனம். உடலைப் பேண உணவு உண்ண வேண்டும். அவ்வுணவு அல்லாஹ்வால் அனுமதிக்கப்ப்ட்ட உண்ணற்குரிய உணவாக இருக்க வேண்டும். அத்தகு நல்லுணவை உண்பவர் உடலில் நோய்கள் அணுகாது. நோயில்லா உடலுக்குரிய
உள்ளம் கடமைகளைச் சரியாக செய்ய வைத்து நேரிய வழியில் நெறியோடு வாழ வைக்கும். நெறிபிழறாது வாழ்வதே பழியஞ்சி வாழும் பழுதில்லாத வாழ்வு. மனிதன் இறந்த பின்னும் அவனின் நற்செயல்கள் பொற்புடன் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும்''.
""உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவருக்குரியதைத் தவறாக உண்ணாதீர்கள். அறிந்தே பிறர் பொருளில் இருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் நீங்கள் அடைய
நீதிபதிகளிடம் கொண்டு செல்லாதீர்கள்'' என்று செப்புகிறது 2-188 ஆவது வசனம். ரபீ அத் பின் அப்தான் அல்ஹல் ரமீ அவரின் நிலத்தை இம்ரவுல் கைஸ் பின் ஆமிர்
அல்கிந்தீ ஆக்கிரமித்து கொண்டதாக ஒரு வழக்கைச் சாந்த நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். கேண்மை நபி (ஸல்) அவர்கள்கேட்ட கேள்விக்கு வாதி ஆதாரம்
எதுவும் அவரிடம் இல்லை என்று பதில் அளித்தார். நீதிபதிகளின் முன் பிரதிவாதி அவரின் நிலம் என்று சத்தியம் செய்ய முனைந்தபொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
அடுத்தவரின் பொருளை அநீதியாக விழுங்க சத்தியம் செய்தால் அல்லாஹ்வைச் சந்திக்கும் பொழுது அவனின் வெறுப்புக்கு உள்ளாக வேண்டும்'' என்று எச்சரித்தார்கள்.
அப்பொழுது இந்த வசனம் அருளப்பட்டது. நூல்- புகாரி, தப்ஸீர் காஜின்.
இவ்வசன விளக்கத்தில் தரப்படும் பழிவரும் பழிதரும் பாவ செயல்கள் (1) ஒருவரின் பொருளைப் பலவந்தமாக பறித்தல், கொள்ளையிடுதல், திருடுதல் (2) சூதாடி
வெல்லுதல், பந்தயம் வைத்து பறித்தல், மது விற்று பொருள் ஈட்டல், விபசார விடுதி நடத்தி சம்பாதித்தல் (3) கையூட்டு பெறுதல், பொய் சாட்சி புகல கூலி பெறுதல் (4)
நம்பிக்கை மோசடி செய்து துரோகம் இழைத்து பிறர் பொருளைச் சூறையாடுதல் (5) வாத திறமையை சாதகமாக்கி பாதக வழக்காடி அநீதியாய் அந்நியர் பொருளை
அபகரித்தல்.
நாணத் தக்க ஈனமான இழி செயல்களைச் செய்யாது பழியஞ்சி வாழ்வோம். அழிவில்லாத அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.