மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு - 19

திருமூலர் "கரு உருவாதல்' குறித்து 41 பாடல்கள் பாடியுள்ளார்.
மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு - 19


திருமூலர் "கரு உருவாதல்' குறித்து 41 பாடல்கள் பாடியுள்ளார்.

ஆண் குழந்தை பிறக்க, பெண் குழந்தை பிறக்க, புத்திசாலியான குழந்தை பிறக்க, திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் காரணம் என்னவென்று விரிவாகப் பாடியுள்ளார். 

மகப்பேறு மருத்துவரான ஜெயம் கண்ணன், திருமந்திரத்தில் "கரு உற்பத்தி' என்ற தலைப்பில் திருமூலர் பாடியுள்ள பாடல்களை ஆராய்ந்து, "திருமந்திரத்தில் மருத்துவம்' என்றொரு புத்தகம் வெளியிடுள்ளார்.

" கரு உருவாதல்' பகுதியின் முதல் பாடல்: 
ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே (பாடல் : 451)

பொருள்: சிவபெருமான் அனைத்தையும் ஆக்குகின்றான். ஒரு உடலில் பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து, பெரும் பூதங்கள் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆன்மா ஐந்து என இருபத்தைந்து தத்துவங்களைச் சேர்த்து, தாயின் கருப்பைக்குள் இருக்கும் உயிரோடு பொருந்தச் செய்கிறான். தான் உருவாக்கிய உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் ஆக்குகின்றான். உயிர்களை உருவாக்கி, அந்த உயிர்களுக்கு வேண்டியவற்றையும் உருவாக்கி அருள்கின்றான்.

அனைத்து உயிர்களையும் சிவபெருமானே உருவாக்குகிறான் என்கிறார் திருமூலர்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே 
( பாடல் : 482)

பொருள் : ஆண் பெண் உறவின் போது, ஆணின் மூச்சுக்காற்று வலது பக்க மூக்கு வழியாக (சூரிய கலை ) வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தை ஆணாகும். மூச்சுக்காற்று இடப்பக்கம் (சந்திர கலை) வெளிப்பட்டால் பெண் குழந்தை பிறக்கும். பிராண வாயுவை அபான வாயு எதிர்த்து வந்தால், ஆணின் உயிரணு  சிதறி இரட்டைக் குழந்தை பிறக்கும். இடப் பக்க மூச்சுக்காற்றும், வலப்பக்க மூச்சுக்காற்றும் சமமாக இருந்தால் குழந்தை திருநங்கையாகப் பிறக்கும்.

வலது பக்க மூக்கு வழியாகக் காற்று வெளியேறினால் ஆண் குழந்தை பிறக்கும்; இடது பக்க மூக்கு வழியாகக் காற்று வெளியேறினால் பெண் குழந்தை பிறக்கும் என்பதை திருமூலர் சொல்லி விட்டார். என்ன  குழந்தை வேண்டும் என நாம் முடிவு செய்யலாம்... ஆனால், என்ன  குழந்தை வேண்டும் என்ற தேவையை வைத்து, காற்றை எப்படி  வலது மூக்கிலோ, இடது மூக்கிலோ வெளியிடச் செய்ய முடியும்...?

தொடர்ந்து இரண்டு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் வலது பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால், வலது மூக்கு வழியாக மூச்சுக்காற்று வெளியேறும் (ஆண் குழந்தை பிறக்க). அதே போல் இடது பக்கம் ஒருக்களித்துப் படுத்தால், இடது மூக்கு வழியாக மூச்சுக்காற்று வெளியேறும் (பெண் குழந்தை பிறக்க).

மூச்சுக்காற்றை வைத்து குழந்தையின் பாலினத்தை நாமே  முடிவு செய்ய முடியும் என்பதே பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே திருமணம் செய்வதை "கால் கட்டு போடுதல்" என்று சொல்கிறோம். அதன் பொருள், காலை கட்டிப் போடுவது அல்ல... கால் என்றால் காற்று என்று பொருள். (மூச்சுக்) காற்றை (கால்) எடுப்பதாலேயே எமனுக்கு காலன் என்று பெயர்.

மனதில் காம எண்ணங்கள் அதிகமாக இருக்கும் போது, அது வேறு சில தீய பழக்கங்களுக்கும் வழி வகுக்கும். அந்த தீய எண்ணங்கள் மூச்சுக் காற்றின் வழி வெளிப்பட்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். திருமணம் செய்யும் போது, அந்தக் காம எண்ணம் கட்டுப்பட்டு, மூச்சுக்காற்றும் முறைப்படி வெளிப்படும் என்பதால் தான், திருமணத்தை "கால் கட்டு' என்கிறோம் (காற்றைக் கட்டுதல்).

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே (பாடல் : 481)

ஆண், பெண் சேர்க்கையின் போது, தாய் வயிற்றில் மலம் அதிகமாக இருந்தால், குழந்தை மந்த புத்தி உடையதாக இருக்கும். தாய் வயிற்றில் நீர் அதிகமாக இருந்தால், குழந்தை வாய் பேச முடியாததாக இருக்கும். இரண்டும் அதிகமாக இருந்தால் கண் பார்வை இல்லாத குழந்தையாகப் பிறக்கும்.

சேர்க்கையின் போது, தாயின் வயிறு கழிவுகள் இன்றி சுத்தமாக இருந்தால் இப்படியான குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கலாம். இதையும் திருமந்திரம் தெரிவிக்கிறது.

பாய்கின்ற வாயுக் குறையுற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே 
(பாடல் : 480)

பொருள்: ஆண், பெண் உறவின் போது, ஆணின் மூச்சுக்காற்று நான்கு நொடிப் பொழுதுக்கும் குறைவாகப் பாய்ந்தால் குழந்தை குட்டையாகப் பிறக்கும். அதற்கும் குறைவாகப் பாய்ந்தால் குழந்தை கால் நடக்க முடியாத முடமாகப் பிறக்கும். காற்றின் ஓட்டம் தடைபட்டால், கூன் முதுகுடைய குழந்தை பிறக்கும். இப்படியான எந்தக் குறையும் இன்றி, நீண்ட ஆயுளுடன், அழகான  குழந்தை பிறக்கவும் திருமந்திரம் வழி சொல்கிறது.

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் என்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிவுந் தவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே (பாடல் : 479)

பொருள்: ஆண், பெண் சேர்க்கையின் போது, ஆணின் மூச்சுக்காற்று ஐந்து நொடிகள் ஓடினால் கருவில் உருவாகும் குழந்தை நூறாண்டுகள் வாழும். நான்கு மாத்திரை ஓடினால், குழந்தை எண்பதாண்டுகள் வாழும். இப்படி மூச்சுக்காற்றை முறையறிந்து சரியான அளவில் செலுத்தும் வலிமை யோகப் பயிற்சி செய்யும் யோகிகளுக்கே எளிதாக கை வரக்கூடிய செயலாகும்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவருக்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே 
(பாடல்: 483)

பொருள்: ஆண், பெண் இருவருக்கும் மூச்சுக்காற்று ஒத்து இயங்கினால் பிறக்கும் குழந்தை மிக்க அழகுடையதாக இருக்கும். மூச்சுக் காற்று தடுமாறினால், திரண்ட வளையல்களை அணிந்தவர்களாகிய பெண்களுக்கு கருத்தரிக்க இயலாத நிலைமை ஏற்படும்.

பகுத்து உணர்வாகிய பல்வகை எங்கும்
வகுத்துள்ளோம் நின்றதோர் மாண்பது ஆமே 
(பாடல் : 476)

என்ற பாடலில், சிவம் பரம்பொருள்தான் பல வகையாக உள்ள உயிர்க் குலத்திற்கு எல்லாம் அவ்வுயிர்களின் காலத்தையும், எல்லையையும் வகுத்து, அவ்வுயிர்கள் உள்ளிருந்து அவற்றை இயக்குகிறான் என்கிறார் திருமூலர்.

இப்படியாக திருமூலர் நல்ல படியாக, ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கான வழிகளைக் கூறுகிறார்.

(தொடரும்)

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com