வரனின் ராசிக்கு வதுவின் ராசி 6, 8 ஆக வந்தால் சஷ்டாஷ்டகம் அல்லது அட்டசட்டம தோஷம் என்பார்கள். இவைகளுக்கு உள்ள விதி விலக்குகளை "அனுகூல (நன்மைதரும்) சஷ்டாஷ்டகம்' என்பார்கள்.
அவைகளைக் கீழே காண்போம்:
பெண் ராசி ஆண் ராசி
மேஷம் : கன்னி
தனுசு : ரிஷபம்
துலாம் : மீனம்
கும்பம் : கடகம்
சிம்மம் : மகரம்
மிதுனம் : விருச்சிகம்
இவைகள் அனுகூல சஷ்டாஷ்டகமாகும்; திருமணம் செய்யலாம்.
சகட யோகம்: சகட என்றால் சக்கரம் என்று பொருள். குரு பகவானுக்கு 6, 8, 12-ஆம் வீடுகளில் சந்திரபகவான் இருந்தால் சகட யோகம் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் வாழ்க்கை ஒரு சக்கரம் போல் கீழே இருந்து மேல் நோக்கியும், மேலிருந்து கீழாகவும் அடிக்கடி அமையும் என்று கூறுவார்கள்.
இத்தகைய நிலைமை அனுபவத்தில் ஒத்துவரவில்லை. அதோடு, சந்திரபகவான் மற்ற சுப கிரகங்களுடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டாலோ அல்லது லக்ன கேந்திரத்தில் இருந்தாலோ நன்மையே உண்டாகிறது என்றும் கூற வேண்டும். இதனால் சகட யோகத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.
கண்டாந்த நாழிகை: கண்டாந்தம் என்றால் கண்டம் + அந்தம். கண்டம் என்றால் கழுத்து; அந்தம் என்றால் முடிவு. ஒரு நட்சத்திரம் முடியும் போது உள்ள 2 நாழிகை "அந்த நாழிகை' எனப்படும். ஒரு நட்சத்திரம் ஆரம்பமாகும் போது உள்ள 2 நாழிகை "கண்ட நாழிகை' எனப்படும். இந்த இரண்டும் சேர்ந்த நான்கு நாழிகையானது "கண்டாந்த நாழிகை'யாகும். இந்த கண்டாந்த நாழிகை தோஷமுடையதாகும்.
இந்த கண்டாந்த தோஷமானது ரேவதி} அசுவினி, ஆயில்யம்}மகம்; கேட்டை}மூலம் ஆகிய இந்த மூன்று ஜோடி நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும் (48 நிமிடங்கள்) அசுவினி நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாழிகையும் (48 நிமிடங்கள்) சேர்ந்த நான்கு நாழிகைகள் அதாவது ஒரு மணி 36 நிமிடங்கள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்பது அனைவரும் அறிந்ததே) கண்டாந்த தோஷ நாழிகைகள் எனப்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும், மகம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாழிகையும் சேர்ந்த நான்கு நாழிகையானது கண்டாந்த தோஷ நாழிகை எனப்படும். கேட்டை நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும், மூலம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாழிகையும் சேர்ந்த நான்கு நாழிகையானதும் கண்டாந்த தோஷ நாழிகை எனப்படும்.
இந்த நாழிகை காலத்தில் குழந்தை பிறப்பதோ, திருமணம் செய்வதோ, பிரயாணம் மேற்கொள்வதோ நல்லதல்ல என்று கூறப்பட்டிருந்தாலும், குழந்தை பிறப்பது நம் கையில் இல்லை என்பதால், இந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு "ஆயுஷீய ஹோமம்' செய்வது நலம் பயக்கும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
மற்றபடி திருமணம் செய்வது, பிரயாணம் செய்வது ஆகியவைகள் நம் கையில் இருப்பதால் இந்த காலத்தைத் தவிர்த்து விடலாம். இந்த கண்டாந்த நாழிகை ஒரு அசுபக் காலம் என்றே கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் சஞ்சாரமும் இந்த காலகட்டத்தில் முழுமையான பலன்களைத் தர இயலாது. இதை "தசா சந்தி' காலத்திற்கு ஒப்பிடலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.