

புதுக்கோட்டையிலிருந்து குடுமியான்மலை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ.தூரத்தில் "புல்வயல்' என்ற ஊர் அமைந்துள்ளது. புல்வயல் கிராமத்தின் மேற்கில் காந்துபட்டி எனப் பெயர் விளங்கும் கரந்துபட்டிக்கு தென் புறத்திலும், புல்வயலுக்கு தெற்கிலுள்ள குறுக்கப்பட்டியிலும் கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுவதால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே புல்வயலில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
புல்வயல் ஊரைச் சுற்றி வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் பாசனங்குளம் சூழ்ந்த பசுமை வயல்களுக்கு அருகில் காந்துப்பட்டி, கொல்லம்பட்டி, நெருகிப்பட்டி, சுந்தரப்பட்டி, குறுக்கப்பட்டி முதலான சின்னஞ்சிறிய கிராமங்கள் உள்ளன.
புல்வயலின் வடகிழக்கில் கமலாம்பாள் சமேத தியாகராஜர் (தியாகஞ்சத ஈஸ்வரமுடையார்) கோயில் உள்ளது. இக்கோயில் கிழக்கு பார்த்த கோயிலாகவும், கூரைவரை கருங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகவும், கூரைக்கு மேலுள்ள விமானம் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கட்டுமானத்தைப் பொருத்தவரை பிற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த கோயிலாகக் காணப்படுகிறது. சுவாமி சந்நிதி எதிரில் நந்தி மண்டபமும், பலிபீடமும் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு உரிய மடப்பள்ளி தற்போது இடிந்த நிலையில் காணப்படுகிறது. தென் பகுதியிலுள்ள சுற்றுச்சுவரில் ராஜகோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது; ஆனால் அது நிறைவடையாமல் உள்ளது.
தியாகஞ்சத ஈஸ்வரமுடையார் கோயிலுள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு இரண்டாம் ராஜராஜ சோழனின் 28-ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். இக்கல்வெட்டு தியாகஞ்சத ஈஸ்வரமுடையார் கோயில் சந்நிதிக்கு பெம்மய வேளானும், தென்னவன் பல்லவத்தரையனும், வள்ளவத்தரையனும் கார்த்திகை மாத முதல் நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு காசுகள் வழங்கி அமுதபடி வழங்க ஏற்பாடு செய்தமையைத் தெரிவிக்கிறது. வடபுறம் சுவரிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய 4-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு வயலக நாட்டு புல்வயல் ஊரார் உமையாண்டி ஏரியினை ஆண்டுதோறும் சீரமைத்து பராமரிக்க பாதுகாவலர்களை ஏற்பாடு செய்திருந்ததைத் தெரிவிக்கிறது.
புல்வயல் அம்பலக் கல்லில் உள்ள 16, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதக்கூடிய ஒரு கல்வெட்டு அவ்வூரை "வயலக நாட்டுப் புல்வயல்' என்று குறிப்பிடுவதோடு பொன்னமராவதியைச் சேர்ந்த கடம்பராயரிடம் பாடிகாவல் என்னும் இவ்வூரினைக் காக்கும் பணியினை ஒப்படைக்கப்பட்ட செய்தியைத்
தெரிவிக்கிறது.
இவ்வூரிலுள்ள பிற கல்வெட்டுகளும் "புல்வயல் வயலக நாட்டின் ஊர்களில் ஒன்று' என்பதைத் தெரிவிக்கின்றன. புல்வயல் நெடுஞ்சாலைக்கு வடபுறம் நடப்பட்டுள்ள ஒரு தூணின் கல்வெட்டு இவ்வூரினை "கூற்று நல்லூர்' என்றும், இவ்வூர் காவலின் பொருட்டு அமைக்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. மேற்கண்ட கல்வெட்டுகள் காட்டும் செய்திகளின் மூலம் இவ்வூரின் வளமை, பெருமையையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இப்போது சிதிலமடைந்த இக்கோயிலில் பாலாயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இத்திருப்பணியில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை அளிக்கலாம். தொடர்புக்கு: 6381756550.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.