ஆலமரம் அல்லது ஆலமரத்தின் இலை குருபகவானுக்கு உரியதாகும். ஆலமரத்தின் இலை போன்று தங்கத்தில் செய்து அதன்மேல் சின்முத்திரை வடிவத்தைச் செதுக்கி, குரு நிலையில் உள்ள ஆன்மிகப் பெரியவர்களின் ஆசியுடன் வியாழக்கிழமை அன்று, அரைஞாண் கயிறு, கழுத்தில் கயிறு ஆகியவற்றில் இணைத்து அணிந்து கொள்வது மிகச் சிறந்த பரிகாரமாகும். சித்தர்கள் போற்றும் சீரிய பிராயசித்தம் இதுவாகும்.
ஆலமரம் அழியாத தன்மை கொண்டதாகும். அதன் விழுதுகள் தரையில் விழுந்து மரங்களாக மாறி விடும் மகத்துவம் கொண்டவை. சத்தியவானின் மனைவி சாவித்திரி ஆலமரத்தடியில் பூஜைகள் செய்து, தன் கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுக் கொண்டாள். ஐந்து ஆலமரங்கள் ஒன்றாக சேர்ந்த இடத்திற்கே "பஞ்சவடி' என்று பெயர்.
"ஊழிக்காலத்தில் மஹாவிஷ்ணு ஆலிலைமேல் குழந்தையாய்ப் படுத்து மிதந்து கொண்டிருக்கிறார்' என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. ஆலமரம் - வியாழ பகவானை குறிக்கிறது. அன்னதானம் - சந்திர பகவானை குறிக்கிறது. நாடு நலம் பெற வேண்டும்; உலகம் நலம் பெற வேண்டும் என்று கருதுகிற அன்பர்கள் அனைவரும் ஆலமரத்தடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். இதனால் உலகம் சாந்தியும், சமாதானமும் பெறும். உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், உலக கர்மங்கள் இறைச்செயலென்னும் உள்ளத்தெளிவை பெற்ற மனிதன் ஆத்ம சாந்தி பெறுகிறான்! -கீதோபதேசம்.
கீழ்க்காணும் குரு பகவானின் மந்திரத்தை தினமும் 108 தடவை தியானம் செய்திடுக: ""தேவாநாஞ்ச ரிஷினாஞ்ச, குரும் காஞ்சன ஸந்நிபம் - புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!''
அனைவருக்கும் குருபகவானின் ஆசிகள் கிடைக்க எல்லாம் வல்ல குருபகவானை பிரார்த்திக்கிறோம்.
வெற்றிக் கொடி நாட்டும் குரு சந்திர யோகம்!
ஜாதகத்தில் சந்திர பகவான் குரு பகவானுடன் இணைந்தோ 5, 9-ஆம் வீடுகளில் இருப்பதாலோ "குரு சந்திர யோகம்' உண்டாகும். இந்த யோகத்தால், கல்வி கேள்விகளில் சிறப்பும், அரிய சாதனைகள் செய்யும் பாக்கியமும், பணவசதியும் உண்டாகும்.
பொதுவாக குரு சந்திர யோகத்தில் பிறந்தவர்கள், தாங்கள் சார்ந்துள்ள துறையில் சாதனைகள் செய்தும், அதற்கு அப்பாற்பட்டு தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு துறையில் ஈடுபட்டும் வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.