

தென்னாடுடைய சிவனாய் எந்த நாட்டவர்க்கும் இறைவனாய் உலகெங்கிலும் வியாபித்து அருளக் கூடிய சிவன், பண்டைய தொண்டை மண்டலத்தில் தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பொன்னேரி அருகேயுள்ள மீஞ்சூரில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் திருவெள்ளைவாயில் என்ற கிராமத்தில் திருவள்ளீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி, ஸ்ரீசாந்தநாயகி என்ற திருப்பெயரால் அம்பிகையுடன் எழுந்தருளி திருவருள் கூட்டுகின்றார்.
ஒருமுறை சோழ மன்னன் ஒருவர் இப்பகுதிக்கு வருகையில் கோயில் ஏதும் இல்லை. எனவே, தானியங்கள் அளப்பதற்கு உதவும் மரக்காலை கவிழ்த்து வைத்து சிவலிங்க வடிவமாக பாவித்து வழிபடுகிறார். அன்றிரவில் இறைவன் மன்னனின் கனவில் தோன்றி, தனக்கு கோயில் கட்டுமாறு கேட்க இக்கோயில் கட்டப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் பலநன்மை தரும் திருப்பங்களை அளிப்பதாக மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.
வரலாற்றுச் சிறப்பு :
கோயில் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தது. பிரம்மசாஸ்தா முருகன் சந்நிதியில் வழிபடப்பெறும் இரண்டு லிங்கங்கள் பல்லவ மன்னர்கள் காலத்தைச் சார்ந்ததாக விளங்குகிறது. இங்கு காணப்படும் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
விக்ரம சோழனது கல்வெட்டில் (1118}1136) ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பையூர் கோட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது எனவும், இக்கோயில் விளக்கெரிக்க நிலம் தானம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இறைவனின் பெயர் திருவெள்ளைவாயிலுடையார் எனக் குறிப்பிடப்படுகிறது.
கோயிலின் அமைப்பு : வாயிலில் ராஜகோபுரம் இல்லாவிடினும் சுதை வேலைப்பாடு மிக்க நுழைவுவாயில் அழகுடன் அமைந்துள்ளது. திருச்சுற்றில் கிழக்கு நோக்கி விநாயகர், முருகர் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு முருகன் பிரம்மசாஸ்தா வடிவில் வலது கையில் அட்சமாலையும், இடது கையில் கெண்டியும் தாங்கி பிரம்ம சாஸ்தாவாக விளங்குகிறார். சண்டிகேசுவரர், நவகிரகங்கள், சூரியன் சந்நிதிகள் அமைந்துள்ளன. பைரவர் வாகனமான நாய் இன்றி இருப்பது இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இவர் ருது பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
மேற்கு நோக்கிய கருவறையில் சிவன் திருவள்ளீஸ்வரர் அழகோடு, மிக கம்பீரமாக மிகப்பெரிய வடிவில் காட்சி நல்கி அருள் கூட்டுகின்றார்.
கருவறைக்கு இடப்புறத்தில் தெற்குநோக்கி அம்பிகை சாந்தநாயகி நெடிதுயர்ந்து நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருளை வழங்குகிறாள். தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் அங்குசம் } பாசம் தாங்கியும் கீழிரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் கருணை பொங்கும் கண்களுடன் புன்னகை பூத்த முகத்துடன் அருள் வழங்கும் அற்புதக் கோலம் காணக் கிடைக்காத அற்புதம்.
1993}ஆம் ஆண்டு கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
பரிகாரப்பலன்கள்: இறைவன் மேற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், பக்தர்களுக்கு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும், நோய்த் தொல்லைகள் அகன்று சுகமாய் வாழவும் கருணை காட்டி அருளுகின்றார்.
மீஞ்சூரிலிருந்தும் பொன்னேரியிலிருந்தும் பழவேற்காடு செல்லும் பேருந்துகளில் ஏறி திருவெள்ளைவாயில் ரேஷன் கடை நிறுத்தத்தில் இறங்கவும்.
தொடர்புக்கு : 86680 69468, 98406 75614.
க. கிருஷ்ணகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.