குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்!

திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான கோயில்கள் அமைந்துள்ளன.
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்!

திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில் .

சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.   ஏனெனில் குபேரனே இந்தத் தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார்.  இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது .

அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்தக் கோயிலைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் "ஹரிகேசநல்லூர்'  என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோயில் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை.  உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் நந்தி அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகம கோயிலுக்குரிய சூரியன்,  சந்திரன்  ஜுர தேவர்  சப்த மாதர்கள் தட்சிணாமூர்த்தி பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர் இடக்காலை வலது காலின் மீதும் மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார்.  இந்தக் கோயிலில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி வாழ்வில் எல்லா வளமும் வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

வெளிச்சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜோஷ்டா தேவி தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்து,  சந்நிதி கொண்டிருக்கிறாள். சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சந்நிதியில் சிவாலயங்களில் காண முடியாது. ஆனால் இக்கோயிலின் பெரிய திருவுருவத்துடன் சந்நிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சந்நிதி கொண்டு அருள்பாலிப்பதால் இது சனீஸ்வர பரிகாரத் தலமாவும் வழிபடப்படுகிறது.

அதேபோல வடக்கு சுற்றில் இறைவன் சந்நிதிக்கு வடகிழக்கு செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப் பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி இடக்கையை மடித்த காலின் மீது வைத்து சுமார் நான்கு அடி உயரத்தில் மிகப் பெரிய உருவமாக குபேரன் காட்சி அளிக்கிறார் .இங்கே குபேரன் எழுந்தருளி இருக்கும் காரணத்தால் ஒருகாலத்தில் இந்த ஊர் "அழகாபுரி'  என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்தக் குபேரனுக்கு தீபாவளி, அட்சய திருதியை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.  இந்த நாள்களில் வெளியூரிலிருந்து எல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர்.

மிகத் தொன்மையான இந்தக் கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  ஜூலை 5}ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  ஜூலை 2, 3, 4-ஆம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.
சேரன்மாதேவி} அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.

மிகச் சிறப்பு வாய்ந்த தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு,  இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயில்  கும்பாபிஷேகம் நடைபெற்ற 48 நாள்களுக்குள் சென்று வழிபட்டு வாழ்வில் வளம் பெறலாம்.  சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com