குழந்தைகளுக்கான கோயில்!

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குடியில் உள்ள சிவன் கோயிலான ஸ்ரீதர்ம ஸம்வர்த்தினி சமேத ஸ்ரீநாமபுரீஸ்வரர் கோயில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
குழந்தைகளுக்கான கோயில்!
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குடியில் உள்ள சிவன் கோயிலான ஸ்ரீதர்ம ஸம்வர்த்தினி சமேத ஸ்ரீநாமபுரீஸ்வரர் கோயில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் வழிபட்டால் குழந்தைகளுக்கு பெரிதும் பாக்கியங்கள் அருளும்.

இந்தக் கோயில் 1305}இல் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகும்.  இங்கு 35 கல்வெட்டுகள் உள்ளன.  சோழ, பாண்டிய மன்னர்கள் சமரசம் செய்து கொண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இதை உறுதி செய்வதுபோல் சோழர் கால,  பாண்டியர் கால கல் தூண்கள் இணைந்து காணப்படுகின்றன.

காசி புராணத்தில் இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகள் இருக்கின்றன. இதற்கு ஏற்ப கோயிலில் தல விருட்சமாக காசி வில்வம் விளங்குகிறது. ஆலங்குடியின் பழைய பெயர் "கிடாரம் கொண்ட சோழபுரம்'  என்றும்  "பேரூர் ஆண்டான்'  என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

இங்குள்ள குரு தட்சணாமூர்த்தி தனிக் கோயில் கொண்டுள்ளார். தட்சணாமூர்த்தி ரிஷபத்தோடு நான்கு ரிஷிகளுக்கு பதிலாக இரண்டு ரிஷிகளாக ரிஷபத்தோடு அருள்பாலிக்கிறார்.  தட்சணாமூர்த்திகளில் முதன்மையாக விளங்கக் கூடிய மேதா தட்சணாமூர்த்தியாக அமைந்திருப்பதாலும், மகா சிவ நாடி ஒலைச்சுவடியில் ஆலங்குடி ஸ்ரீநாமபுரீஸ்வரர் கோயில் குரு பலத்தின் ஆலயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைப் போன்று குரு தட்சணாமூர்த்தி எதிரில் ஆதி மாணிக்கவாசகர் அமர்ந்து குரு பகவானை தரிசித்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.  மாணிக்கவாசகர் இந்தக் கோயிலுக்கு வந்து குரு பகவானைத் தரிசித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆகையால், இங்கு குரு பகவான் ஜாதக, கிரஹ ரீதியாக குரு பலம் அற்றும், குரு நீச்சமாக இருப்பவர்கள் தரிசித்தால் இரண்டு இடர்ப்பாடுகளிலிருந்தும் விடுபடுகிறார் என்பது ஐதீகம். 

இந்தக் கோயில் இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கப்படுகிறது.  இதை உறுதி செய்யும் பொருட்டு குரு பகவானுக்குரிய தானியமான கடலை இந்தச் சுற்று வட்டாரத்தில் பயிரிடப் பெற்று இந்திய அளவில் கடலைக்கு புகழ்பெற்ற வட்டாரமாக ஆலங்குடி திகழ்கிறது.

கோயில் சிறப்புகள்: ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி 10 முதல் தை 10 வரை காலை 6.30 மணியிலிருந்து 6.45 மணிக்குள் மூன்று நிமிடங்கள் மட்டும் சிவனை சூரியன் ஒளிக்கதிர்களால் வழிபடும் அற்புதக் காட்சியை தரிசிக்கலாம். 

பல ஆண்டுகளாக ஜாதக, கிரஹ ரீதியாக குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பிலிருந்து விடுபட இந்தக் கோயிலில் குழந்தையை தத்து கொடுத்தும் பெயரை மாற்றி, இறைவனுடைய பெயரை வைத்தும் வருகின்றனர். இதனால் குழந்தைகளும், குடும்பத்தாரும் பல நன்மைகளை அடைகின்றனர். 

பால சனீஸ்வரர் குழந்தை வடிவில் இரண்டு கைகளோடும், காகம் வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.  இந்தக் கோயில் அண்மையில் குடமுழுக்கு கண்டது.

புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய ஊர்களிலிருந்து ஆலங்குடிக்கு அதிக அளவில் பேருந்துகள் உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com