சமூக நல்லிணக்கத்துக்கு சமநீதிதான் அடிப்படை
கோலாலம்பூர், ஜன. 16: பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் சமமான நீதி கிடைத்தால் மட்டுமே எல்லோரும் இணக்கமாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று சமநீதி உலகிற்கான பன்னாட்டு இயக்கத்தின் தலைவர


கோலாலம்பூர், ஜன. 16: பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் சமமான நீதி கிடைத்தால் மட்டுமே எல்லோரும் இணக்கமாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று சமநீதி உலகிற்கான பன்னாட்டு இயக்கத்தின் தலைவர் சந்திர முஸôபர் கூறினார்.
கோலாலம்பூரில் இந்தியப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போனால்தான் சிறுபான்மையின மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்த நேரிடுவதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: எல்லா சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகத்தான் ஒரே மலேசியா என்ற முழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் மலேய மக்களுக்கென கல்வி, வேலையில் இடஒதுக்கீடு அளித்த காரணத்தால்தான் இப்போது இந்த நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட மக்கள் கணிசமாக எல்லா துறைகளிலும் முன்னேற முடிந்துள்ளது. இந்த மக்களுக்கு எதுவும் கிடைக்காமல் வெளிநாட்டினருக்கே பெரும் பங்கு வாய்ப்புகளும் கிடைத்திருந்தால், பெரும்பான்மை மக்கள் கோபம் கொண்டிருப்பார்கள்.
அதேபோல சிறுபான்மை மக்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வகையில்தான் மலேசியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இப்போது எல்லா பிரிவினரும் சம வாய்ப்பு பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் சில துறைகளில் வேலைவாய்ப்பில் பூர்விக மக்களுக்கு இடஒதுக்கீடு தர தேவையில்லை என்ற நிலை இப்போது உள்ளது. மலேய மக்களுக்கு உரிய வாய்ப்புகள் வந்துவிட்டதால் இனி இட ஒதுக்கீடு தேவைப்படாது.
மலேசியாவில் உள்ள இந்தியர்களைப் பொருத்தவரை, தங்களின் பிரச்னைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு இப்போது ஏதும் இல்லை என்ற குறை உள்ளது. இருந்தாலும் இந்த மக்களின் குறைகளையும் தீர்க்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. இதை உணர்ந்த காரணத்தால்தான், மலேசிய இந்தியர்களின் பிரச்னைகளைக் கவனிக்கும் துணைக் குழுவின் தலைவர் பொறுப்பை பிரதமரே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் சில சமயங்களில் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். 2008 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக 2007 நவம்பரில் இஸ்லாங்கோ மாநிலத்தில் இந்துக் கோவில் ஒன்றை இடிக்க ஓர் அதிகாரி அனுமதி தந்துவிட்டார். வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதற்காக அந்தக் கோவில் நிலம் தேவைப்பட்ட நிலையில், இந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அது நிலுவையில் இருந்தது. ஒப்பந்ததாரர் இதை இடிக்க அனுமதி பெற்று, இடிக்கத் தொடங்கினார்.
அப்போதுதான் இந்துக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டது. இந்துராப் அமைப்பும் தீவிரமடைந்தது. ஆளும் கூட்டணிக்கு தேர்தலில் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதிகாரிகளின் தவறுகளும் சில சமயங்களில் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன.
அல்லா விவகாரம்: அல்லா என்ற வார்த்தையை கிறிஸ்தவப் பத்திரிகை பயன்படுத்தியது தொடர்பாக இப்போது மலேசியாவில் பிரச்னை எழுந்துள்ளது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது பற்றி பிரச்னை இருக்கக் கூடாது. அது தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் முக்கியமானதாகும்.
அல்லா என்பது இறைவனைக் குறிக்கும் சொல்லாக மதிக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக பயன்படுத்தும்போது பிரச்னைகள் எழுகின்றன.
கடந்த வாரத்தில் மலேசியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவாலயங்களுக்கு 2 மாதங்களுக்குப் பாதுகாப்பு தர 8 முஸ்லிம் தன்னார்வ அமைப்புகள் முன்வந்திருக்கின்றன. இது நல்லிணக்கத்துக்கான நல்ல அறிகுறியாகும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...