இலங்கையில் 13ஏ சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினர்களை அதிபர் மகிந்த ராஜபட்ச வெள்ளிக்கிழமை நியமித்தார்.
19 பேரை கொண்ட இக்குழுவின் தலைவராக மூத்த அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸýம் இக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் வரும் செப்டம்பரில் தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் ராஜபட்ச முடிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்வுக் குழு:1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 13ஏ சட்டப் பிரிவில் மாகாணங்களுக்கு போலீஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இப்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அனைத்து கட்சிகளும் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். எனினும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இக்குழுவில் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவை அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இக்கட்சிகளும், இலங்கை முஸ்லிம் காங்கிரசும் மாகாணங்களின் அதிகாரத்தைப் பறிக்க, ஆளும் கூட்டணி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









