பெல்ஜியம்: தற்கொலைப் படைத் தாக்குதல், குண்டு வெடிப்பில் 34 பேர் பலி

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் இன்று காலை நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.
பெல்ஜியம்: தற்கொலைப் படைத் தாக்குதல், குண்டு வெடிப்பில் 34 பேர் பலி
Updated on
1 min read

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் இன்று காலை நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர். பிரஸ்ஸெல்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேரும், மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 பேரும் பலியாயினர். இந்த இரு சம்பவங்களிலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பிரஸ்ஸெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் (இந்திய நேரம் பிற்பகல் 1.30) அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு வெடிகுண்டை தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் வெடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.  இந்த வெடிகுண்டு தாக்குதலால் விமான நிலையத்தின் உள்கூரை பலத்த சேதமடைந்தது. இச்சம்பவத்தில் 14 பேர் இறந்தனர். 96 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து  மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர்.

இந்த இரு சம்பவங்களிலும் இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். மேலும், விமான நிலையத்திலிருந்து பெரும் புகை எழும்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இந்த தாக்குதல் கண்மூடித்தனமானது, பயங்கரமானது, கோழைத்தனமானது என்றார் பெல்ஜியம் பிரதமர் சார்சலஸ் மிச்சல்.

பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சலா அப்தெஸ்லாமை, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போலீஸார், பிரஸ்ஸெல்ஸ் புறநகர்ப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுப் பிடித்தனர். இந்தச் சூழலில், அந்த நகரின் விமான, ரயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் இந்தியர்கள் எவரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனப் பணியாளர்கள் இருவர் விமான நிலைய குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

பிரதமர் மோடி கண்டனம்

பிரஸ்ஸெல்ஸில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் வேதனையளிப்பதாக உள்ளன. அந்தத் தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தனது சுட்டுரையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com