ஜெருசலேம்: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, உலகின் மிகப் பாதுகாப்பான சொகுசு அறை ஒன்றில் தங்கியுள்ள சுவராசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுளளார். அங்கு ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள கிங் டேவிட் ஹோட்டலில்தான் அவர் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் உள்ள உலகின் மிகவும் பாதுகாப்பான 'சூட்' எனப்படும் சிறப்பு வசதிகள் கொண்ட அறையில்தான் அவர் தங்கியுள்ளார். அது பற்றிய தகவல்கள்களை அந்த ஹோட்டலின் நிர்வாக இயக்குனரும், மோடியின் பயணத்திற்கு பொறுப்பாளருமான ஷெல்டன் ரிட்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ள அறையானது வெடுகுண்டு வீச்சு, வேதிப்பொருள் தாக்குதல் உள்ளிட்ட எதனாலும் பாதிக்கப்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஹோட்டலும் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானாலும், அவரது அறைக்கு எதுவும் நேராது. அது அப்படியே ஒரு மூடப்பட்ட கவசப் பெட்டி போல கீழே இறங்கி விடும்.
அத்துடன் மோடி தங்கியுள்ள தளத்தில் உள்ள 110 அறைகளும் முற்றாக காலி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமெரிக்க அதிபர்கள் இதுவரை இங்கு வந்து தங்கியுள்ளனர். தற்பொழுது மோடி இங்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடியின் உணவுப் பழக்கத்துக்கு ஏற்றவாறு அவரது அறையில் முழுக்க சைவ உணவுகள் கிடைக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு தேவையான விசேஷ உணவுகளை சமைத்துக் கொள்வதற்கு வசதியாக, அங்கே தனியாக சமையலறை ஒன்றும் உள்ளது. அத்துடன் அலங்காரதிற்கு என வைக்கப்படும் பூக்கள் கூட, இந்திய குழுவினருக்கு ஏற்றதாக வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ரிட்ஸ் தெரிவித்தார். கிங் டேவிட் ஹோட்டல் குழுமத்தின் உரிமையாளர்களான மைக்கேல் பெடர்மானின் 'எல்பிட் சிஸ்டம்ஸ்' நிறுவனம் ஆளில்லா குட்டி விமானங்களான 'ட்ரோன்கள்' தயாரிப்பிலும் மற்றும் விமான மின்னணுவியல் தொழில் நுட்ப சாதனைகளை தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.