இந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளுக்கு இடையே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி 6.4 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தீவை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் உணரப்பட்டன. அதில் ஒரு சில அதிர்வுகள் 5.9 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. மிகவும் மோசமான அதிர்வு ஆகஸ்ட் 5-ஆம் தேதி 6.9 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. இதனால், சுமார் 460-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோப்போ பூர்வோ டிவிட்டரில் தெரிவித்தித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இதில் பெரும்பாலான உயிர் சேதங்கள் தெற்கு லோம்போக் பகுதியில் தான் ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 466 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு லோம்போக் பகுதியில் 40, கிழக்கு லோம்போக் பகுதியில் 31, மத்திய லோம்போக் பகுதியில் 2 மற்றும் மடாரம் நகரில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அருகில் உள்ள தீவுகளான கிழக்கு சும்பவா தீவு மற்றும் பாலி தீவில் முறையே 7 பேர் மற்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எங்களுடைய அமைப்பின் தற்போதைய இலக்கு நிவாரண முகாம்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குவது.
சுத்தமான குடிநீர், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தங்குவதற்கு தேவையான பொருட்கள் முகாம்களுக்கு தேவைப்படுகிறது" என்றார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏராளமான சாலைகள் மூடியுள்ளது. இதனால், ஒரு சில மோசமான இடங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் மட்டுமே செல்லக் கூடிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.