சஞ்சுவான் தாக்குதல்: இந்தியா எல்லை தாண்டி தாக்கக் கூடாது: பாகிஸ்தான் எச்சரிக்கை

சஞ்சுவான் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்த முனையக் கூடாது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

சஞ்சுவான் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்த முனையக் கூடாது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ராணுவச் சீருடை அணிந்தபடி சனிக்கிழமை திடீரென புகுந்தனர். அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேவேளையில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவத்தினர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
ஒரு சம்பவம் (சஞ்சுவான் தாக்குதல்) தொடர்பாக உரிய முறையில் புலன்விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பே அது குறித்து பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இந்திய அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது. அந்தச் சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காஷ்மீரில் நடைபெறும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா மிருக பலத்தைப் பயன்படுத்துகிறது. அதிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை அந்நாடு எழுப்புகிறது. 
காஷ்மீரில் இழைக்கப்படும் கொடுமைகளையும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறும், எல்லை தாண்டி எந்தத் தாக்குதலையும் நடத்தக் கூடாது என்றும் இந்தியாவை சர்வதேச சமூகம் வலியுறுத்தும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காஷ்மீரின் உரியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 2016-இல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். 
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானில் துல்லியத் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜிபி எஸ்.பி.வைத் கடந்த செய்தியாளர்களிடம் கருத்து கூறுகையில் "சஞ்சுவான் தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது குறித்த தொலைபேசி உரையாடல்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். 
இந்த அமைப்பு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான இந்தியப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது' என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com