மெக்கா மசூதிக்குள் கேளிக்கை விளையாட்டு விளையாடிய பெண்களால் சவூதி அரேபியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மெக்காவினுள் அந்தப் பெண்கள் 'சீக்வன்ஸ்' என்னும் கேளிக்கை விளையாட்டை விளையாடியுள்ளனர். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதனால் சூவுதி அரேபியா முழுவதும் பெரும் சர்ச்சை நிலவியது. இந்த செயலுக்கு சிலர் தங்களது கண்டனங்களையும் தெரிவித்தனர். வேறு சிலர் அதில் தவறு இல்லை என்றும் தங்கள் தரப்பு கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மெக்கா மசூதி செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
கடந்த வெள்ளிக்கிழமை மெக்கா மசூதியினுள் 4 பெண்கள் 'சீக்வன்ஸ்' என்ற கேளிக்கை விளையாட்டு விளையாடுவது தெரியவந்தது. உடனடியாக அந்த இடத்துக்கு பெண் நிர்வாகிகளை அனுப்பினோம். இதுபோன்ற புனித இடங்களில் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை அந்த பெண் நிர்வாகிகள் எச்சரித்தனர். அதற்கு அந்தப் பெண்களும் தகுந்த ஒத்துழைப்பை அளித்து அந்த இடத்தில் இருந்து உடனடியாக கலைந்து சென்றனர் என்றார்.
முன்னதாக, 2015-ம் ஆண்டு சவூதி அரேபியாவில் உள்ள மஸ்ஜித்-ஈ-நப்வி என்ற மசூதியில் சில இளைஞர்கள் சீட்டு விளையாடிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.