நாடாளுமன்ற வளாகத்துக்குள் தினந்தோறும் குறைந்தபட்சம் 160 முறை ஆபாச வலைதளங்களை இயக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் நாடாளுமன்ற விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் மட்டும் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்துக்குள் மொத்தம் 24,473 முறை ஆபாச வலைதளங்களை இயக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
அதில், தினந்தோறும் குறைந்தபட்சம் 160 முறை இந்த முயற்சி நடைபெற்றுள்ளது. இவ்விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2008-ம் ஆண்டு ஆபாச வலைதளங்களை பார்வையிட்டது காவல்துறையால் நிரூபிக்கப்பட்டதால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தனது நீண்ட நாள் நண்பரும், அமைச்சருமான டேமியன் க்ரீனை கடந்த மாதம் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுவரை நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 2,13,020 ஆபாச வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதுபோல 2017-ம் ஆண்டில் 1,13,208 ஆபாச வலைதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கணினி சேவைகளில் இருந்தும் கிட்டத்தட்ட அனைத்து ஆபாச வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது முழுக்க அங்குள்ள கணினிகளில் மட்டுமே உள்ள புள்ளிவிவரங்கள் அல்ல.
மாறாக, இங்குள்ள வை-ஃபை சேவைகளின் மூலமாக மூன்றாம் நபர்களின் கணினி மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களில் ஆபாச வலைதளங்கள் தேடப்பட்டது தொடர்பான பதிவுகளின் அடிப்படையிலும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.