சிங்கப்பூர்: வட கொரியா மீதான கசப்புணர்வு மறைந்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என்ற ஒரு வார்த்தையால் மட்டும் இந்த சந்திப்பை குறிப்பிட்டு விட முடியாது, சரித்திர சந்திப்பு என்றும் கூறலாம்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு பல மணி நேரங்கள் நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது டொனால் டிரம்ப் இயல்பாக இருந்தாலும், சற்றே பதற்றமான நிலையில்தான் கிம் ஜோங் காணப்பட்டார். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதனை ஊடக நண்பர்களுக்குக் காண்பித்த டொனால்ட் டிரம்ப், அதனை கிம் ஜோங்கிடம் அளித்து விட்டு, அவரது தோளைத் தட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் வட கொரியா மீதான கசப்புணர்வு மறைந்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களை தனியாக சந்தித்துப் பேசினார். அப்பொழுதுஅவர் கூறியதாவது:
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு மிகவும் நேர்மையான ஒன்றாக அமைந்தது. நானும் கிம்மும் சில மணி நேரங்கள் தீவிர ஆலோசனை நடத்தினோம். தற்பொழுது அமெரிக்காவும் வட கொரியாவும் சேர்ந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தினை எழுதத் தயாராகி விட்டோம்.
அதேசமயம் இந்த சந்திப்புக்குப் பிறகு வட கொரியா மீதான கசப்புணர்வு மறைந்துள்ளது. முன்னரே தெரிவித்திருந்த படி, எங்களது வெற்றிகரமான பேச்சுவார்தைக்குப் பிறகு, தற்பொழுது வெள்ளை மாளிகைக்கு வருமாறு கிம்முக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன்.
வடகொரியாவில் செயல்படும் ஏவுகணை தளங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக கிம் என்னிடம் உறுதியளித்துள்ளார். கடந்த கால செயல்பாடுகளை எதிர்காலத்தின் பொழுது வரையறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.