சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் வான்வழி தாக்குதல்: 37 பேர் பலி!
டமாஸ்கஸ்: சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் அதிபர் பஷாரின் ஆதரவு ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் களமிறங்கி போரிடுகின்றன.
தொடர்ந்து சர்வதேச நாடுகளின் கண்டனத்தை மீறி ரஷியப் படைகள் சிரியாவில் அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் அதிபர் பஷாரின் ஆதரவு ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் ஆய்வகம் என்னும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து ஆய்வகத் தலைவர் ராமி அப்டெல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிழக்கு கூட்டாவின் அர்பின் பகுதியில் வியாழன் அன்று போர்நிறுத்தம் வருவதற்கு முன்னர் ரஷ்யா நாடு வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலில் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சு வாயு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக மக்கள் மூச்சுத்திணறி பலியாகினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் கிழக்கு கூட்டா பகுதியில் நாங்கள் நேரடியாக வான்வழி தாக்குதலில் ஈடுபடவில்லை என ரஷ்ய அரசாங்கம் உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளது.