இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நீடிப்பதாக சபாநாயகர் அங்கீகாரம்: தொடரும் குழப்பம் 

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நீடிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அங்கீகாரம் அளித்துள்ளார். 
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நீடிப்பதாக சபாநாயகர் அங்கீகாரம்: தொடரும் குழப்பம் 

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நீடிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அங்கீகாரம் அளித்துள்ளார். 

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டணி அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் அமைந்தது. அவரது அரசுக்கு சிறீசேனாவின் யுபிஎஃப்ஏ கட்சியும் ஆதரவளித்தது. இந்நிலையில், இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ராஜபட்சவின் புதிய கட்சி அதிக இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து, ரணில் - சிறீசேனா கூட்டணியில் விரிசல் உருவானது.

ரணில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜபட்ச கட்சியும், சிறீசேனா கட்சியும் கூட்டாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தன. எனினும், அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரணில் தோற்கடித்தார். இதன்பிறகு, ரணிலுக்கும், சிறீசேனாவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியாகவே, பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு, ராஜபட்சவை சிறீசேனா கடந்த வெள்ளியன்று நியமித்தார்.

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி வரை அதிபர் மைத்ரிபால சிறீசேனா முடக்கி வைத்துள்ளார். பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபட்சவை நியமித்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை சிறீசேனா எடுத்துள்ளார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவுக்கு ரணில் கடிதம் எழுதியிருந்த நிலையில், சிறீசேனா இந்நடவடிக்கையை எடுத்திருப்பது, மஹிந்த ராஜபட்சவுக்கு ஆதரவான செயலாக கருதப்படுகிறது.

225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபட்ச, அதிபர் சிறீசேனா கூட்டணிக்கு 95 பேரின் ஆதரவே உள்ளது. அதேநேரத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ரணிலுக்கு மேலும் 7 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதேபோல், ராஜபட்ச, சிறீசேனா கூட்டணிக்கும் போதிய பலம் இல்லை.

இதனால், ராஜபட்ச தனக்கு தேவையான பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட அவகாசம் அளிக்கும் வகையிலேயே நாடாளுமன்றத்தை சிறீசேனா முடக்கி வைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

புதிய பிரதமராக ராஜபட்சவை சிறீசேனா நியமித்திருக்கும்போது, தான் இன்னமும் பிரதமராக நீடிப்பதாக ரணில் தெரிவித்திருக்கிறார். இதனால் ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அங்கீகரிப்பதா அல்லது பிரதமராக ரணில் தொடர்வதை அனுமதிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், நாடாளுமன்ற தலைவர் ஜெயசூர்யாவிடமே உள்ளது. இதனால் அவர் எடுக்கும் முடிவை இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கி இருந்தனர். 

இந்நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நீடிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அங்கீகாரம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று பேசுகையில், 'நாடளுமன்றம் கூடி சுயமாக ஒருவரைத் தேர்வு செய்யும் வரை பிரதமராக ரணில் விக்ரம்சிங்க தொடர்ந்து நீடிக்கிறார்' என்று தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக இலங்கையில் அரசியல் குழப்பம் தொடர்நது நீடிக்கிறது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com